பா.ஜனதாவில் இருந்து விலகிய ஆனந்த்சிங் காங்கிரசில் இணைந்தார்

பா.ஜனதாவில் இருந்து விலகிய ஆனந்த்சிங் நேற்று காங்கிரசில் இணைந்தார். பிற கட்சி எம்.எல்.ஏ.க்கள் மேலும் பலர் காங்கிரசில் சேருவார்கள் என்று மந்திரி டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
பா.ஜனதாவில் இருந்து விலகிய ஆனந்த்சிங் காங்கிரசில் இணைந்தார்
Published on

பெங்களூரு,

பல்லாரி மாவட்டம் விஜயநகர் தொகுதியில் கடந்த 2013-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜனதா சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ஆனந்த்சிங். இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு பா.ஜனதாவில் இருந்து விலகினார். மேலும் தனது எம்.எல்.ஏ. பதவியையும் ஆனந்த்சிங் ராஜினாமா செய்து, அதற்கான கடிதத்தை சபாநாயகர் கோலிவாட்டிடம் கொடுத்தார். அவர் காங்கிரசில் சேர போவதும் உறுதியானது.

அதன்படி, நேற்று பெங்களூருவில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் முதல்-மந்திரி சித்தராமையா, மாநில தலைவர் பரமேஸ்வர், மந்திரி டி.கே.சிவக்குமார் முன்னிலையில் ஆனந்த்சிங் அக்கட்சியில் இணைந்தார். அவருக்கு கட்சியின் கொடியை அணிவித்து சித்தராமையா வரவேற்றார். பின்னர் மந்திரி டி.கே.சிவக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பா.ஜனதா கட்சியில் இருந்த ஆனந்த்சிங், அக்கட்சியில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்துள்ளார். இதனால் பல்லாரி மாவட்டத்தில் காங்கிரசின் கட்சியின் பலம் பல மடங்கு உயர்ந்துள்ளது. ஆனந்த்சிங் மட்டும் அல்ல, பா.ஜனதா மற்றும் ஜனதாதளம்(எஸ்) கட்சிகளை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள், முக்கிய தலைவர்கள், பிரமுகர்கள் காங்கிரஸ் கட்சியில் இணைய ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த கட்சிகளை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் என்னுடன் தொடர்பில் இருந்து வருகிறார்கள். அவர்கள் கூடிய விரைவில் காங்கிரசில் இணைவார்கள்.

காங்கிரஸ் கட்சி கடந்த 5 ஆண்டுகள் சிறப்பாக ஆட்சி நடத்தியுள்ளது. மக்களிடம் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு அதிகரித்துள்ளது. இதனால் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலிலும் காங்கிரஸ் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை பிடிப்பது உறுதி.

இவ்வாறு மந்திரி டி.கே.சிவக்குமார் கூறினார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com