அந்தேரியில் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ 2 பேர் படுகாயம்

அந்தேரியில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 2 பேர் படுகாயமடைந்தனர்.
அந்தேரியில் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ 2 பேர் படுகாயம்
Published on

மும்பை,

மும்பை அந்தேரி மேற்கு, வெர்சோவா யாரி ரோட்டில் உள்ள மஸ்ஜில் மஜித் சவுக் பகுதியில் சரிதா என்ற குடியிருப்பு கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தின் 4-வது மாடியில் உள்ள ஒரு வீட்டில் நேற்று காலை 11.20 மணிக்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. வீட்டில் இருந்து கரும்புகை வெளியேறியது.

தகவல் அறிந்து தீயணைப்பு துறையினர் 5 வாகனங்களில் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் முதலில் கட்டிடத்தில் சிக்கி இருந்தவர்களை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். அந்த நேரத்தில் வீட்டில் இருந்த கியாஸ் சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதையடுத்து வீட்டில் தீ கொழுந்துவிட்டு எரிந்தது.

இந்தநிலையில் சிலிண்டர் வெடித்த போது கட்டிடத்திற்கு அருகில் நின்று கொண்டு இருந்த குடியிருப்புவாசிகள் அலறி அடித்து கொண்டு ஓடினர். தீயணைப்பு வீரர்கள் சுமார் 1 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் தீயை அணைத்தனர்.

இந்த பயங்கர தீ விபத்தில் தீப் தேசாய் (வயது35), நீலிமா (65) ஆகிய 2 பேர் படுகாயமடைந்தனர். அவர்களுக்கு கூப்பர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தீ விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com