

சென்னை மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் திருவாதிரையை முன்னிட்டு மார்கழி மாதம் திருவெம்பாவை விழா ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் நடந்து வருகிறது. விழாவை யொட்டி திருமுறைகள் திருக்காப்பு செய்யப்படுவதுடன், விழா நாட்களில் தீபாராதனைகளின்போது திருவெம்பாவை மட்டுமே பாடப் படுவது மரபாக இருந்து வருகிறது. நடப்பாண்டு கடந்த 9-ந்தேதி தொடங்கிய விழா நேற்றுடன் நிறைவடைந்தது. விழா நாட்களில் தினசரி காலை நேரங்களில் மாணிக்கவாசகர் புறப்பாடும், மாணிக்கவாசகர் அருளி செய்த திருவெம்பாவை பாடல்களும் இசைக்கப்பட்டது. விழாவில் 3 நாட்கள் இரவு பொன் ஊஞ்சல் விழா மற்றும் பஞ்சமூர்த்தி புறப்பாடும் நடைபெற்றது.
திருவெம்பாவை நிறைவு நாளான நேற்று நடராஜ பெருமானுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு காலை 5 மணிக்கு ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது. அது முடிந்ததும் திருமுறை வழிபாடுகள் நடந்தது. திருவாதிரை நாளான நேற்று அதிகாலை 4.30 மணிக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு உள்ளிட்ட பக்தர்கள் ஆருத்ரா தரிசன விழாவில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். உடன் கோவில் இணை கமிஷனர் தா.காவேரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.