அடுக்குமாடி குடியிருப்பு கட்ட எதிர்ப்பு பாய், போர்வைகளுடன் கலெக்டர் அலுவலகத்தில் குடியேற முயற்சி தேனியில் பரபரப்பு

அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தேனி கலெக்டர் அலுவலக வளாகத்தில் பாய், போர்வைகளுடன் வந்து குடியேற முயன்றவர்களால் பரபரப்பு ஏற்பட்டது.
அடுக்குமாடி குடியிருப்பு கட்ட எதிர்ப்பு பாய், போர்வைகளுடன் கலெக்டர் அலுவலகத்தில் குடியேற முயற்சி தேனியில் பரபரப்பு
Published on

தேனி,

ஆண்டிப்பட்டி அருகே மேக்கிழார்பட்டி பகுதியில் ஆவாரம்பட்டி, மேக்கிழார்பட்டி, தெப்பம்பட்டி ஆகிய கிராமங்களை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு 14 ஆண்டுகளுக்கு முன்பு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. இவர்களுக்கு நீண்ட காலமாக நிலம் அளவீடு செய்து கொடுக்கப்படாமல் இருந்தது. மக்களின் தொடர் போராட்டங்களை தொடர்ந்து சில ஆண்டுகளுக்கு முன்பு நிலம் அளவீடு செய்து கொடுக்கப்பட்டது. அந்த இடத்தில் மக்கள் குடிசை அமைத்து குடியிருந்து வருகின்றனர்.

தங்களுக்கு தொகுப்பு வீடுகள் கட்டிக் கொடுக்க வேண்டும் என்று அந்த மக்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால், தொகுப்பு வீடுகளுக்கு பதில் அடுக்குமாடி வீடுகள் கட்டி கொடுக்க முயற்சி நடப்பதாக கூறப்படுகிறது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

குடியமர்த்தும் போராட்டம்

இந்தநிலையில் அந்த பகுதியில் மக்களுக்கு கொடுத்த நிலத்தை பறிக்கக்கூடாது என்றும், அடுக்குமாடி வீடுகள் கட்டி கொடுக்கும் முடிவை கைவிட்டு அவர்களுக்கு வழங் கப்பட்ட இடத்தில் தொகுப்பு வீடுகள் கட்டி கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி கலெக்டர் அலுவலக வளாகத்தில் மக்களை குடியமர்த்தும் போராட்டம் நடத்த போவதாக ஆதித்தமிழர் பேரவையினர் அறிவித்தனர்.

அதன்படி, ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் சுரேஷ் தலைமையில், ஆவாரம்பட்டி, மேக்கிழார்பட்டி, தெப்பம்பட்டி ஆகிய கிராமங்களை சேர்ந்த மக்கள் பாய், போர்வைகளுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று வந்தனர்.

கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஆங்காங்கே நின்று கொண்டிருந்தவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, அலுவலக வளாகத்தில் இருந்து வெளியே அழைத்து வந்தனர். மேலும் கலெக்டர் அலுவலக வளாகத்தில் குடியேறும் போராட்டம் நடத்தினால் கைது செய்யப்படுவீர்கள் என்று போலீசார் எச்சரித்தனர்.

இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு பாய், போர்வைகளுடன் கலெக்டர் அலுவலகம் முன்பு கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது, அடுக்குமாடி வீடுகள் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி ஒருவரை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com