திருப்பூர் மாவட்டத்தில் வாகன சோதனை தீவிரமடைகிறது 24 பறக்கும் படை அதிகாரிகள் நியமனம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளிலும் வாகன சோதனையில் ஈடுபட 24 பறக்கும் படை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தில் வாகன சோதனை தீவிரமடைகிறது 24 பறக்கும் படை அதிகாரிகள் நியமனம்
Published on

திருப்பூர்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளிலும் வாகன சோதனையில் ஈடுபட 24 பறக்கும் படை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தேர்தல் பணிகள்

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் திருவிழா தொடங்கியுள்ளது. இதற்கான வாக்குப்பதிவு ஏப்ரல் மாதம் 6-ந் தேதி நடைபெறுகிறது. தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.

திருப்பூர் மாவட்டத்திலும் இந்த விதிமுறைகள் நேற்று முன்தினம் மாலையில் இருந்தே அமலுக்கு வந்தது. திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, அவினாசி, காங்கேயம், மடத்துக்குளம், பல்லடம், உடுமலை, தாராபுரம் ஆகிய 8 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளில் தேர்தல் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

24 பறக்கும் படை அதிகாரிகள்

இதற்கிடையே இந்த 8 சட்டமன்ற தொகுதிகளிலும் தொகுதிக்கு 3 பேர் வீதம் 24 பறக்கும் படை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் நிலை கண்காணிப்பாளர்கள், வீடியோ கிராபர்கள் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டு உள்ள தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபடுவார்கள். அப்போது நிர்ணயிக்கப்பட்டதை விட கூடுதலாக பணம் கொண்டு செல்லப்படுகிறதா? வேட்டி, சேலைகள் உள்ளிட்ட பரிசு பொருட்கள் வாக்காளர்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறதா? என்பது உள்பட பல்வேறு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com