

குளித்தலை
கொரோனா நோய்பரவலை கட்டுப்படுத்தும் பொருட்டு குளித்தலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளை கண்காணிக்க, இந்த தொகுதியை 28 மண்டலங்களாக பிரித்து அதற்கென அலுவலர்களை நியமிக்கும் பணி நேற்று முன்தினம் நடைபெற்றது. இதுதொடர்பாக குளித்தலை வட்டாட்சியர் கலியமூர்த்தி தலைமையில் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில், கண்காணிப்பு பணியில் ஈடுபடவுள்ள அலுவலர்கள் தங்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள மண்டலத்தில் உள்ள பகுதியில் அரசு உத்தரவைமீறி முககவசம் அணியாமலும், தேவையின்றி இருசக்கர வாகனத்தில் சுற்றியும், விதிமுறைகளைமீறி கடைகளை நடத்திவருபவர்களை கண்டறிந்து அவர்களுக்கு அபராதம் விதிக்கவேண்டும். அதுபோல மருந்துக்கடைகளில் சளி, காய்ச்சல், இருமல் போன்றவற்றிருக்கு மாத்திரைகள் கேட்டுவரும் பொதுமக்களுக்கு மருந்துகள் வழங்கக்கூடாதெனவும், அப்படி வழங்கினால் மருந்து மாத்திரைகள் வாங்குபவரது விவரங்களை கேட்டறிந்து குறித்து வைத்துக்கொள்ளவேண்டுமென மருந்து கடைக்காரர்களுக்கு அறிவுறுத்தவேண்டும். மேலும் யாரேனும் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்று தெரியவந்தால் அவர்கள் விவரம் குறித்து அதிகாரிகளுக்கு கண்காணிப்பு அலுவலர்கள் தெரியபடுத்தவேண்டுமென இக்கூட்டத்தில் கூறப்பட்டது. இதையடுத்து பணி மேற்கொள்ள இருந்த அலுவலர்களுக்கு ஆணை வழங்கப்பட்டது. அவர்களுக்கென தனித்தனி வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. குளித்தலை சட்டமன்ற உறுப்பினர் இரா.மாணிக்கம் கண்காணிப்பு அலுவலர்கள் பணிகளை கொடியசைத்து தொடங்கிவைத்தார். இதில் தனிவட்டாட்சியர் வைரபெருமாள், வருவாய் ஆய்வாளர் துரைசாமி மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள், தி.மு.க. கட்சியினர் உள்பட பலர் உடனிருந்தனர்.