தர்மபுரியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 806 பேருக்கு பணி நியமன ஆணை கலெக்டர் திவ்யதர்சினி வழங்கினார்

தர்மபுரியில் 120 தொழில் நிறுவனங்கள் பங்கேற்ற தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 806 பேருக்கு பணி நியமன ஆணைகளை கலெக்டர் திவ்யதர்சினி வழங்கினார்.
தர்மபுரியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 806 பேருக்கு பணி நியமன ஆணை கலெக்டர் திவ்யதர்சினி வழங்கினார்
Published on

தர்மபுரி:

தர்மபுரியில் 120 தொழில் நிறுவனங்கள் பங்கேற்ற தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 806 பேருக்கு பணி நியமன ஆணைகளை கலெக்டர் திவ்யதர்சினி வழங்கினார்.

வேலைவாய்ப்பு முகாம்

தர்மபுரி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) ஆகியவை இணைந்து நடத்திய தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் தர்மபுரி அரசு கலைக்கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது. இதில் 120-க்கும் மேற்பட்ட தனியார் தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழிற்பயிற்சி நிறுவனங்கள் பங்கேற்று தங்கள் நிறுவனங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்தனர்.

முகாமில் சுமார் 2000-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் கலந்து கொண்டனர். இந்த முகாமில் தேர்வு செய்தவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் விழா மற்றும் பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது.

பணி நியமன ஆணைகள்

விழாவுக்கு கலெக்டர் திவ்யதர்சினி தலைமை தாங்கி 806 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். மேலும் வேலைவாய்ப்புடன் கூடிய திறன் மேம்பாட்டு பயிற்சி முகாமில் பயிற்சி முடித்தவர்களுக்கு சன்றிதழ்களையும் கலெக்டர் வழங்கி பாராட்டினார்.

இந்த முகாமில் கூடுதல் கலெக்டர் வைத்திநாதன், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மண்டல இணை இயக்குனர் லதா, மகளிர் திட்ட இயக்குனர் பாபு, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் தீபா, தர்மபுரி அரசு கலைக்கல்லூரி முதல்வர் கிள்ளிவளவன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் செண்பகவள்ளி மற்றும் அரசு அலுவலர்கள், வேலை நாடும் இளைஞர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com