வீடுகளில் கொள்ளையடித்த 2 வெளிமாநில ஆசாமிகள் கைது விமானத்தில் வந்து கைவரிசை

விமானத்தில் வந்து வீடுகளில் கொள்ளையடித்து விட்டு தப்பி செல்லும் 2 வெளிமாநில ஆசாமிகள் கைது செய்யப்பட்டனர்.
வீடுகளில் கொள்ளையடித்த 2 வெளிமாநில ஆசாமிகள் கைது விமானத்தில் வந்து கைவரிசை
Published on

மும்பை,

மும்பை கார் மேற்கு தாண்டா பகுதியில் வீடு புகுந்து கொள்ளை அடிக்கும் சம்பவம் அடிக்கடி நடந்து வருவதாக போலீசாருக்கு புகார் வந்தது. இந்த புகாரின் படி போலீசார் நடத்திய விசாரணையில் 13 வீடுகளில் கொள்ளை சம்பவம் நடந்து இருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். இதில் கொள்ளையர்களின் அடையாளம் தெரியவந்ததை தொடர்ந்து நவிமும்பை காமோட்டேவில் பதுங்கி இருந்த டெல்லியை சேர்ந்த சமீர் கான் (வயது23) என்பவர் போலீசாரின் பிடியில் சிக்கினார்.

அவரை கைது செய்து போலீசார் நடத்திய விசாரணையில் மேற்கு வங்கத்தை சேர்ந்த சதாம் சேக் (22) என்பவருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. சதாம் சேக் நகைப்பட்டறை தொழிலாளியாக இருந்து வருகிறார்.

உருக்கி விற்றனர்

இவர்கள் கொள்ளை அடிக்கும் நகைகளை உருக்கி அதனை நகைக்கடையில் விற்று பணம் சம்பாதித்து வந்து உள்ளனர்.

இதையடுத்து போலீசார் சதாம் சேக்கை பிடிக்க கூட்டாளி சமீர்கான் மூலம் செல்போனில் தொடர்பு கொண்டனர். இதில் மும்பையில் கொள்ளை அடிக்க வருமாறு தெரிவித்து விமான டிக் கெட்டை அனுப்பி வைத்தனர்.

இதனை நம்பிய சதாம் சேக் சம்பவத்தன்று விமானத்தில் வந்து இறங்கினார். அவரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். கைதான இருவரிடமும் இருந்து ரூ.15 லட்சம் மதிப்புள்ள கார், மோட்டார் சைக்கிள் போன்றவற்றை பறிமுதல் செய்தனர்.

போலீஸ் விசாரணையில் கொள்ளையடிப்பதற்காக விமானத்தில் மும்பை வந்து தங்கள் கைவரியை காட்டி விட்டு மீண்டும் விமானம் மூலம் சொந்த ஊருக்கு தப்பி செல்வதை வழக்கமாக கொண்டிருந்தது தெரியவந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com