பல பெண்களுடன் தொடர்பில் இருந்ததால் மனைவியை தவிர்த்தேன் கைதான வங்கி காசாளர் பரபரப்பு வாக்குமூலம்

பல பெண்களுடன் தொடர்பில் இருந்ததால் மனைவியை தவிர்த்து வந்தேன் என்று மணப்பாறையில் கைதான வங்கி காசாளர் வாக்குமூலம் அளித்தார்.
பல பெண்களுடன் தொடர்பில் இருந்ததால் மனைவியை தவிர்த்தேன் கைதான வங்கி காசாளர் பரபரப்பு வாக்குமூலம்
Published on

திருச்சி,

திருச்சி மாவட்டம், மணப்பாறை மஸ்தான் தெரு பகுதியை சேர்ந்தவர், எட்வின் ஜெயக்குமார் (வயது 36). இவர் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் காசாளராக பணியாற்றி வந்தார். அவருக்கும், தஞ்சாவூரை சேர்ந்த தாட்சர் என்பவருக்கும் கடந்த 2019-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

திருமணம் ஆனது முதல் மனைவியுடன் ஏனோ, தானோவென எட்வின் ஜெயக்குமார் இருந்து வந்தார். மேலும் மனைவியிடம் கூடுதலாக வரதட்சணை கேட்டும் கொடுமை செய்தார். இதனால், கணவரின் நடத்தையில் சந்தேகம் அடைந்த தாட்சர், ஒருநாள் அவரது செல்போனை பார்த்தபோது அதில் எட்வின் ஜெயக்குமார் பல பெண்களுடன் ஆபாசமான முறையில் இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து தாட்சர் அளித்த புகாரின்பேரில் எட்வின் ஜெயக்குமாரை மணப்பாறை மகளிர் போலீசார் கைது செய்தனர்.

வாக்குமூலம்

இதுகுறித்து அவரிடம் ஒப்புதல் வாக்குமூலம் பெறப்பட்டது. அப்போது அவர் போலீசாரிடம் கூறியதாவது:-

என்ஜினீயரிங் படிப்பு முடித்த நான், வங்கித் தேர்வு எழுதி கடந்த 2014-ம் ஆண்டு குளித்தலையில் உள்ள வங்கி ஒன்றில் கிளர்க்காக பணியில் சேர்ந்தேன். பின்னர் 2016-ம் ஆண்டு பணிமாறுதல் ஆகி புதுக்கோட்டைக்கு வந்தேன். எனக்கும், தஞ்சாவூரை சேர்ந்த தாட்சர் என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது. அப்போது பணம் மற்றும் நகைகள் வரதட்சணையாக கொடுக்கப்பட்டது. கூடுதலாக வரதட்சணை வாங்கி வரும்படி தாட்சரிடம் கூறினேன்.

மேலும், திருமணத்திற்கு முன்னர் எனக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்தது. அவர்களுடன் நெருக்கமாக இருப்பதை எனது செல்போனில் பதிவு செய்து அடிக்கடி பார்த்து ரசித்து வந்தேன். இதனால், மனைவி மீது எனக்கு ஈர்ப்பு இல்லாமல் போய் விட்டது. அவருடன் நெருங்கி பழகுவதை தவிர்த்து வந்தேன்.

ஆபாச புகைப்படம்

எனக்கு வரும் ஆபாச குறுஞ்செய்தி (மெசேஜ்) மற்றும் வீடியோக்களை எனது மனைவி பார்த்து விட்டார். மேலும் நான் வங்கியில் வேலை பார்க்கும் சக ஊழியர்களையும், வீட்டின் அருகில் வசிக்கும் பெண்களையும் அவர்களுக்கு தெரியாமல் ஆபாசமாக புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து எனது செல்போனில் வைத்திருந்தேன்.

மேலும், வங்கிக்கு வரும் பெண் வாடிக்கையாளர்கள் பாஸ்புக் மற்றும் பணபரிவர்த்தனைகளையும் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் எடுத்து வைத்திருந்தேன். திருமணத்திற்கு முன்பாக பல பெண்களை வீட்டிற்கு அழைத்து வந்து உல்லாசமாக இருந்த ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை எனது செல்போன்களில் இருந்ததை எனது மனைவி பார்த்து விட்டு இதுபற்றி என்னிடம் கேட்டு பிரச்சினை செய்தார்.

இதனால் கைகலப்பு ஏற்பட்டு நான் எனது மனைவியை அடித்தேன். இதுபற்றி எனது அம்மாவிடம் எனது மனைவி கூறியபோது என் அம்மாவும் தாட்சரையே திட்டினார். அதன்பிறகு என் மனைவி குளிக்கும்போது நான் அவருக்கு தெரியாமல் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து என்னிடம் பிரச்சினை செய்தால் நான் இந்த புகைப்படம் மற்றும் வீடியோவை வெளியிட்டு விடுவதாக மிரட்டினேன். இதையடுத்து என் மனைவி அவர் ஊருக்கு சென்று புகார் அளித்து விட்டார். இதனால், நான் திருச்சி உள்பட பல்வேறு இடங்களில் தலைமறைவாக இருந்தேன் என்று அந்த வாக்குமூலத்தில் தெரிவித்து உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். எட்வின் ஜெயக்குமார் வாக்குமூலத்தால் அவருடன் தொடர்பில் இருந்த பெண்கள் கலக்கத்தில் உள்ளனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com