

திருப்பூர்,
திருப்பூரில் ஏலச்சீட்டு நடத்தி மோசடி செய்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
திருப்பூர் காமராஜ் ரோடு பகுதியை சேர்ந்தவர் மாசிலாமணி (வயது 54). இவர் திருப்பூர் டைமண்ட் தியேட்டர் பகுதியில் நிதி நிறுவனம் நடத்தி வரும் மண்ணரையை சேர்ந்த சேகர் என்பவரிடம் ரூ.60 ஆயிரம் ஏலச்சீட்டில் சேர்ந்துள்ளார். இதன் பின்னர் மாசிலாமணி மூலம் மேலும், 5 பேர் ரூ.60 ஆயிரம் ஏலச்சீட்டில் சேர்ந்துள்ளனர்.
இதன் பின்னர் 6 பேரும் பணத்தை செலுத்தி வந்துள்ளனர். இந்நிலையில் ஏலச்சீட்டு முடிவடைந்ததும் அதற்கான ரூ. 3 லட்சத்து 60 ஆயிரத்தை மாசிலாமணி உள்பட 6 பேரும் கேட்டுள்ளனர்.
ஆனால் சேகர் அந்த பணத்தை கொடுக்காமல் மோசடி செய்ததாக தெரிகிறது. மேலும், பணத்தை கேட்டவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்து மாசிலாமணி திருப்பூர் மத்திய போலீசில் புகார் கொடுத்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் ஏலச்சீட்டு நடத்தி மோசடி செய்த சேகரை போலீசார் நேற்று கைது செய்தனர்.