பணமோசடி வழக்கில் கைதான யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூரின் ஜாமீன் மனு தள்ளுபடி - சிறப்பு கோர்ட்டு உத்தரவு

பணமோசடி வழக்கில் கைதான யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டது.
பணமோசடி வழக்கில் கைதான யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூரின் ஜாமீன் மனு தள்ளுபடி - சிறப்பு கோர்ட்டு உத்தரவு
Published on

மும்பை,

பெருநிறுவனங்களுக்கு முறைகேடாக கடன்கள் வழங்கியதால் மும்பையை தலைமயகமாக கொண்டு செயல்படும் யெஸ் வங்கி நிதி நெருக்கடியில் சிக்கியது. இதையடுத்து அந்த வங்கியின் செயல்பாடுகளை ரிசர்வ் வங்கி முடக்கியது. நிறுவனங்களுக்கு தாராளமாக கடன் வழங்கியதன் மூலம் யெஸ் வங்கியின் நிறுவனரான ராணா கபூரும், அவரது குடும்பத்தினரும் சுமார் ரூ.4 ஆயிரம் கோடிக்கு ஆதாயம் பெற்றது தெரியவந்தது.

இதையடுத்து ராணா கபூர் மீது பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து கடந்த மார்ச் மாதம் அவரை கைது செய்தனர்.

இதற்கிடையே, இந்த வழக்கின் தகுதி அடிப்படையில் தனக்கு ஜாமீன் கோரி ராணா கபூர் பணமோசடி வழக்குகளை விசாரிக்கும் மும்பை சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அவரது ஜாமீன் மனு மீதான விசாரணை நேற்று சிறப்பு கோர்ட்டு நீதிபதி பி.பி.ராஜ்வித்யா முன்னிலையில் நடந்தது.

அப்போது ராணா கபூரின் வக்கீல்கள், இந்த வழக்கில் விசாரணை முடிந்து விட்டது. எனவே ராணா கபூரை சிறையில் வைக்க எந்த காரணமும் இல்லை என்று தெரிவித்தனர். ஆனால் இதை ஏற்க மறுத்த நீதிபதி, ராணா கபூரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து அதிரடி உத்தரவிட்டார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com