சென்னை துறைமுகத்துக்கு வந்த சரக்கு ரெயிலில் ஆணின் துண்டிக்கப்பட்ட கால் கிடந்ததால் பரபரப்பு

சேலத்தில் இருந்து சென்னை துறைமுகத்துக்கு வந்த சரக்கு ரெயிலில் துண்டிக்கப்பட்ட நிலையில் ஆணின் கால் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை துறைமுகத்துக்கு வந்த சரக்கு ரெயிலில் ஆணின் துண்டிக்கப்பட்ட கால் கிடந்ததால் பரபரப்பு
Published on

பெரம்பூர்,

சேலத்தில் இருந்து இரும்பு கம்பிகளை ஏற்றிக்கொண்டு சரக்கு ரெயில் ஒன்று நேற்று முன்தினம் மாலை சென்னை துறைமுகத்துக்கு வந்தது. பின்னர் சரக்கு ரெயிலில் இருந்த இரும்பு கம்பிகளை இறக்கும் பணியில் துறைமுக ஊழியர்கள் ஈடுபட்டனர்.

அப்போது சரக்கு ரெயிலில் கொண்டு வரப்பட்ட இரும்பு கம்பிகளுக்கு நடுவில் துண்டிக்கப்பட்ட நிலையில் ஆணின் கால் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி துறைமுகம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த துறைமுகம் போலீசார், துண்டிக்கப்பட்ட ஆணின் காலை கைப்பற்றி சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து, சேலத்தில் இருந்து சென்னை வரும் வழியில் அந்த நபர் தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றபோது சரக்கு ரெயில் மோதியதில் தூக்கி வீசப்பட்டு அதில் கால் மட்டும் துண்டாகி சரக்கு ரெயிலில் விழுந்து கிடந்ததா? அல்லது யாராவது அவரை கொலை செய்துவிட்டு அடையாளம் தெரியாமல் இருக்க உடலை துண்டு, துண்டாக வெட்டி வீசியதில் கால் மட்டும் சரக்கு ரெயிலில் விழுந்து கிடந்ததா? என விசாரித்து வருகின்றனர்.

மேலும் துண்டிக்கப்பட்ட அந்த கால் யாருடையது? அவர் ரெயில் விபத்தில் சிக்கி பலியாகி விட்டாரா? அல்லது கால் மட்டும் துண்டாகி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறாரா? என்ற கோணத்திலும் சேலம்-சென்னை இடையே ஏதாவது ரெயில் விபத்து நடந்து உள்ளதா? எனவும் ரெயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்த சம்பவம் சென்னை துறைமுகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com