வாத்திய கருவிகளை இசைத்துக்கொண்டு கரகாட்டம் ஆடியபடி கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த கலைஞர்கள் நிவாரணம் கேட்டு மனு கொடுத்தனர்

வாத்திய கருவிகளை இசைத்துக்கொண்டும், கரகாட்டம் ஆடியபடியும் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் வந்த நாட்டுப்புற கலைஞர்கள் நிவாரணம் கேட்டு மனு கொடுத்தனர்.
வாத்திய கருவிகளை இசைத்துக்கொண்டு கரகாட்டம் ஆடியபடி கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த கலைஞர்கள் நிவாரணம் கேட்டு மனு கொடுத்தனர்
Published on

திண்டுக்கல்,

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று காலை நாட்டுப்புற மற்றும் நாடக கலைஞர்கள் மேளம் உள்ளிட்ட வாத்திய கருவிகளை இசைத்தபடி வந்தனர். அதில் 2 பெண்கள் தலையில் கரகம் வைத்து கரகாட்டம் ஆடியபடி வந்தனர். இதையடுத்து ஊரடங்கால் தங்களுடைய தொழில் பாதிக்கப்பட்டு இருப்பதால், நிவாரணம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

திண்டுக்கல் மாவட்டத்தில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுப்புற மற்றும் நாடக கலைஞர்கள் இருக்கிறோம். கொரோனா பாதிப்பின் காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கிறோம். நாட்டுப்புற நலவாரியத்தில் பதிவு செய்த பலருக்கு இதுவரை நிவாரணம் கிடைக்கவில்லை. அதேபோல் பதிவு செய்யாத ஏராளமான கலைஞர்களின் நிலைமை மோசமாக உள்ளது. மேலும் அடுத்த 5 மாதங்களுக்கு வேலைவாய்ப்பு இருக்காது.

நிவாரண பொருட்கள்

இதனால் நமது பாரம்பரியம், பண்பாட்டை காக்கும் கலைஞர்களாகிய நாங்கள், எங்களின் வாழ்வையே இழக்கும் நிலையில் உள்ளோம். எனவே, நலவாரியத்தில் பதிவு செய்யாத கலைஞர்களுக்கும் ரூ.2 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். மேலும் 15 நாட்களுக்கு தேவையான அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்க வேண்டும். கடந்த 4 மாதமாக ஊரடங்கால் பாதிக்கப்பட்ட கலைஞர்களுக்கு பேரிடர் நிவாரணமாக தலா ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். மேலும் நாட்டுப்புற கலைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் அரசின் நலத்திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும். இறப்பு மற்றும் சடங்கு நிகழ்வுகளில் சமூக இடைவெளியுடன் கலைஞர்கள் பங்கேற்க அனுமதிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com