தந்தையை கத்தியால் சரமாரியாக குத்தியதால், தம்பியை உருட்டு கட்டையால் அடித்துக் கொன்ற அண்ணன்

தந்தையை கத்தியால் சரமாரியாக குத்தியதால் தம்பியை உருட்டு கட்டையால் அண்ணன் அடித்துக் கொன்றார். காட்டுமன்னார்கோவில் அருகே நடந்த இந்த பயங்கர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
தந்தையை கத்தியால் சரமாரியாக குத்தியதால், தம்பியை உருட்டு கட்டையால் அடித்துக் கொன்ற அண்ணன்
Published on

காட்டுமன்னார்கோவில்,

காட்டுமன்னார்கோவில் அருகே கீழகஞ்சங்கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது 65). இவருக்கு பழனிமுத்து (30), காளிமுத்து (27), பாக்கியராஜ் (19) ஆகிய 3 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். மகள்களுக்கு திருமணமாகி விட்டது. மகன்களுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பாக்கியராஜ், மதுகுடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார். இதை பன்னீர்செல்வம் கண்டித்துள்ளார்.

இதனால் அவர்களுக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பாக்கியராஜ், தான் வைத்திருந்த சிறிய கத்தியால் தந்தையை சரமாரியாக குத்தினார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் வலியால் அலறி துடித்தார். அந்த சத்தம்கேட்டு பழனிமுத்து அங்கு சென்றார்.

பின்னர் அவர் தனது தம்பியிடம் ஏன் இப்படி செய்தாய் என்று கூறி தட்டிக்கேட்டார். இதனால் அவர் களுக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பழனிமுத்து அங்கு கிடந்த உருட்டு கட்டையால் பாக்கியராஜை அடித்துக்கொன்றார். இது குறித்த தகவலின் பேரில் காட்டுமன்னார்கோவில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் பாக்கியராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே கத்திக்குத்தில் படுகாயம் அடைந்த பன்னீர்செல்வம் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பழனிமுத்துவை கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com