வரதட்சணை கேட்டு கொடுமை, தூக்குப்போட்டு கர்ப்பிணி தற்கொலை - கணவர் மீது வழக்கு

வருசநாடு அருகே தூக்குப்போட்டு கர்ப்பிணி தற்கொலை செய்து கொண்டார். அவரிடம் வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாக கணவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
வரதட்சணை கேட்டு கொடுமை, தூக்குப்போட்டு கர்ப்பிணி தற்கொலை - கணவர் மீது வழக்கு
Published on

கடமலைக்குண்டு,

வருசநாடு அருகே முருக்கோடை கிராமத்தை சேர்ந்தவர் தேசிங்குராஜா. இவருடைய மகன் அமர்நாத் (வயது 29). கடமலைக்குண்டு தனியார் நகை கடன் வங்கியில் வேலை செய்து வருகிறார். இவருக்கும் ஆண்டிப்பட்டி அருகே ராமகிருஷ்ணாபுரம் கிராமத்தை சேர்ந்த மாசிமாயன் மகள் அபிநயா (24) என்பவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

தற்போது அபிநயா கர்ப்பிணியாக உள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு அபிநயா தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த வருசநாடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு அபிநயாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர்.

இதற்கிடையே வருசநாடு போலீஸ் நிலையத்தில் அபிநயாவின் தந்தை மாசிமாயன் புகார் அளித்தார். அதில் அமர்நாத் அபிநயாவிடம் வரதட்சணை கேட்டு துன்புறுத்தியுள்ளார். இதுதொடர்பாக கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது என்று கூறியிருந்தார்.

அதன்பேரில் அமர்நாத் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அபிநயாவுக்கு திருமணமாகி 6 மாதங்களே ஆவதால் பெரியகுளம் ஆர்.டி.ஓ. ஜெயபிரீத்தா விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com