குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் கண்டமங்கலம் அருகே பரபரப்பு

கண்டமங்கலம் அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் கண்டமங்கலம் அருகே பரபரப்பு
Published on

விழுப்புரம்,

கண்டமங்கலம் அருகே உள்ள பி.எஸ்.பாளையம் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலம் பொதுமக்களுக்கு தடையின்றி குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. தற்போது ஏற்பட்டுள்ள கடும் வறட்சியின் காரணமாக கடந்த 2 மாதங்களாக போதுமான குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை.

இதனால் ஏற்பட்ட குடிநீர் தட்டுப்பாட்டினால் பொதுமக்கள் மிகவும் அவதியடைந்து வந்தனர். இதனிடையே கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீர் ஏற்றக்கூடிய மின் மோட்டார் திடீரென பழுதானது. இதனால் முற்றிலும் குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டது. எனவே மின் மோட்டார் பழுதை சரிசெய்யக்கோரி அப்பகுதி பொதுமக்கள், சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் முறையிட்ட னர். இருப்பினும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதனால்ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று காலை 8.15 மணியளவில் காலிகுடங்களுடன் பி.எஸ்.பாளையம் பஸ் நிறுத்தம் அருகே திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்த தகவல் அறிந்ததும் கண்டமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி மின் மோட்டார் பழுதை சரிசெய்து குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர்.

இதை ஏற்ற பொதுமக்கள் அனைவரும் காலை 9 மணியளவில் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். அதன் பிறகு போக்குவரத்து சீரானது. இந்த சம்பவத்தால் மதகடிப்பட்டு- திருக்கனூர் சாலையில் 30 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com