அவினாசியில், குடிநீர் கேட்டு பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

குடிநீர் கேட்டு அவினாசி பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
அவினாசியில், குடிநீர் கேட்டு பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்
Published on

அவினாசி

அவினாசி பேரூராட்சி 5-வது வார்டில் பி.எஸ்.சுந்தரம் வீதியில் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இந்த பகுதி பொதுமக்களுக்கு முறையாக குடிநீர் வினியோகம் செய்வது இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வந்தனர். மேலும் அந்த பகுதியில் அமைக்கப்பட்டு இருந்த ஆழ்குழாய் கிணற்றில் இருந்த மோட்டாரும் பழுதடைந்துவிட்டது. இது குறித்து பேரூராட்சி நிர்வாகத்திடம் அப்பகுதி பொதுமக்கள் பலமுறை மனு கொடுத்தனர். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குடிநீர்கேட்டும், புதியதாக ஆழ்குழாய் கிணறு அமைக்கக்கோரியும் நேற்று அவினாசி பேரூராட்சி அலுவலகம் சென்றனர். பின்னர் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். பின்னர் பேரூராட்சி செயல் அதிகாரி சம்பத்திடம் மனு கொடுத்தனர்.

கஸ்தூரிபாய் வீதி

அதே போல் அவினாசி பேரூராட்சி 11-வது வார்டு கஸ்தூரிபாய் வீதியை சேர்ந்த பொதுமக்கள் அவினாசி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் செயல் அதிகாரியை சந்தித்து மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கஸ்தூரிபாய் வீதி, கங்கவர்வீதி ஆகிய பகுதிகளில் உள்ள ஆழ்குழாய் கிணற்றில் பொருத்தப்பட்டு இருந்த மோட்டார்கள் பழுதாகி விட்டன. இதனால் குடிநீர் கிடைக்காமல் சிரமப்படுகிறோம். எனவே பழுதான மோட்டாரை சீரமைக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனுக்களை பெற்றுக்கொண்ட செயல் அதிகாரி, விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதையடுத்து முற்றுகை போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com