மராத்தா இடஒதுக்கீடு குறித்து விவாதிக்க சட்டசபை சிறப்பு கூட்டம்

மராத்தா இடஒதுக்கீடு குறித்து விவாதிக்க சட்டசபை சிறப்பு கூட்டத்தை கூட்ட உள்ளதாக முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார்.
மராத்தா இடஒதுக்கீடு குறித்து விவாதிக்க சட்டசபை சிறப்பு கூட்டம்
Published on

மும்பை,

மராத்தா சமுதாயத்தினர் இடஒதுக்கீடு கேட்டு பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் அவர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது.

வன்முறையில் காயம் அடைந்த நவிமும்பை வாலிபர் ஒருவர் பலியானார். மேலும் ஒருவர் ஆற்றில் குதித்தும், மற்றொருவர் விஷம் குடித்தும் தற்கொலை செய்து கொண்டனர். இதனால் மராட்டிய அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது.

இந்தநிலையில் மராத்தா சமுதாயத்தினர் இடஒதுக்கீடு பிரச்சினை குறித்து விவாதிக்க முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தார். அதன்படி நேற்று மும்பை விதான்பவனில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது.

இதில் சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் ராதாகிருஷ்ண விகே பாட்டீல், மேல்-சபை எதிர்க்கட்சி தலைவர் தனஞ்செய் முண்டே மற்றும் அஜித் பவார், சகன் புஜ்பால் உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டனர்.

கூட்டத்திற்கு பிறகு முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

மராட்டிய மாநில பிற்படுத்தப்பட்டோர் கமிஷன் தனது அறிக்கையை சமர்ப்பித்ததும் மராத்தா இடஒதுக்கீடு குறித்து நடவடிக்கை எடுக்க சட்டசபை சிறப்பு கூட்டம் கூட்டப்படும்.

இந்த சிறப்பு கூட்டத்தில் கமிஷன் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில், மராத்தா மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில், சட்டமோ அல்லது தீர்மானமோ நிறைவேற்றப்படும்.

மேலும் முந்தைய (காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ்) அரசுகள் இயற்றிய சட்டத்தில் உள்ள குறைகளும் சரிசெய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com