1,278 பயனாளிகளுக்கு ரூ.8.9 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் - எடப்பாடி பழனிசாமி இன்று வழங்குகிறார்

சேலம் மாவட்டத்தில் 1,278 பயனாளிகளுக்கு ரூ.8 கோடியே 9 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை இன்று (வெள்ளிக்கிழமை) முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்குகிறார்.
1,278 பயனாளிகளுக்கு ரூ.8.9 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் - எடப்பாடி பழனிசாமி இன்று வழங்குகிறார்
Published on

சேலம்,

சேலம் மாவட்டத்தில் நடைபெறும் அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக 4 நாட்கள் சுற்றுப்பயணமாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (வெள்ளிக்கிழமை) காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் சேலம் விமானநிலையத்துக்கு வருகிறார். அங்கு அவருக்கு அரசு அதிகாரிகள், கட்சி நிர்வாகிகள் வரவேற்பு அளிக்கின்றனர்.

பின்னர் நங்கவள்ளியில் நடைபெறும் விழாவில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு புதிய தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி நிலையத்தை தொடங்கி வைக்கிறார். இதையடுத்து வனவாசியில் நடக்கும் அரசு விழாவில் முதல்-அமைச்சர் பங்கேற்கிறார். புதிதாக கட்டப்பட்ட வனவாசி அரசு பல்வகை தொழில்நுட்ப கல்லூரி, வகுப்பறைகளை திறந்து வைப்பதுடன் மாணவர்கள் சேர்க்கையும் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்.

மேலும் அவர், சேலம் அம்மாபேட்டையில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.3 கோடியே 91 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட அடுக்குமாடி கட்டிடத்தை திறந்து வைக்கிறார். அதே விழாவில், பல்வேறு அரசுத்துறை சார்பில் 1,278 பயனாளிகளுக்கு ரூ.8 கோடியே 9 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்குகிறார்.

அதைத்தொடர்ந்து அவர் கொங்கணாபுரம் ஊராட்சி ஒன்றியம் வெள்ளாளபுரத்தில் நடைபெறும் விழாவில் பங்கேற்கிறார். அங்கு கொங்கணாபுரம் புதிய போலீஸ் நிலையம், அம்மா பூங்கா, அம்மா உடற்பயிற்சி கூடம் ஆகியவற்றை முதல்-அமைச்சர் திறந்து வைக்கிறார்.

நாளை(சனிக்கிழமை) எடப்பாடியில் நடைபெறும் அரசு விழாவில் முதல்-அமைச்சர் பங்கேற்று பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிறார். மாலையில் அவர், சேலம் மாநகர், மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். நாளை மறுநாள்(ஞாயிற்றுக்கிழமை) சேலம் போஸ் மைதானத்தில் அரசு பொருட்காட்சியை எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்.

30-ந் தேதி காலை சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட 4 மண்டலங்களில் 9 இடங்களில் அமைக்கப்பட்ட 14 பசுமை வெளி பூங்காக்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கிறார். இதைத்தொடர்ந்து அவர் சென்னை புறப்பட்டு செல்கிறார். முதல்-அமைச்சர் வருகையையொட்டி மாநகர் மற்றும் மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com