பெட்டமுகிலாளம் கிராமத்தில் 55 பேருக்கு நலத்திட்ட உதவிகள் - அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி வழங்கினார்

பெட்டமுகிலாளம் கிராமத்தில் 55 பேருக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி வழங்கினார்.
பெட்டமுகிலாளம் கிராமத்தில் 55 பேருக்கு நலத்திட்ட உதவிகள் - அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி வழங்கினார்
Published on

தேன்கனிக்கோட்டை,

தேன்கனிக்கோட்டை தாலுகா பெட்டமுகிலாளம் ஊராட்சி காமகிரி சித்தாபுரம் அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்தில் மலை கிராம மக்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் பிரபாகர் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார்.

மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டைகள், மகப்பேறு நிதி உதவிகள், காசநோயாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகைக்கான ஆணைகளை அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி வழங்கினார். நிகழ்ச்சியில் 55 பயனாளிகளுக்கு ரூ.2 லட்சத்து 73 ஆயிரத்து 800 மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி வழங்கி பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

மலை கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று சிறப்பு மருத்துவ முகாம் இங்கு நடைபெறுகிறது. அனைத்து தரப்பு மக்களும் சுகாதாரமான முறையில் இருப்பதற்காக இது போன்ற முகாம்கள் நடத்தப்படுகிறது. இந்த முகாம் மூலமாக பொது மருத்துவம், கண் சிகிச்சை, கர்ப்பிணிகளுக்கு ஸ்கேன், எலும்பு முறிவு சிகிச்சை, பல் மருத்துவம், தோல் நோய் சிகிச்சை போன்றவை அளிக்கப்படுகிறது.

மேலும் பொதுமக்களுக்கு டெங்கு, பன்றிக்காய்ச்சல் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. பொதுமக்கள் இது போன்ற மருத்துவ முகாமை பயன்படுத்தி கொள்ள வேண்டும். மழைக் காலம் தொடங்க உள்ளதால் வைரஸ் காய்ச்சல் போன்ற நோய்களை தடுக்கும் வகையில் வீடுகளை சுற்றி சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்துக்கொள்ள வேண்டும். பெட்ட முகிலாளம் முதல் காலிகட்டா வரை சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் பேசினார்.

முகாமில் தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரி, ஓசூர் காவேரி, அகர்வால் மருத்துவமனைகளைச் சேர்ந்த டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.

இதில் ஓசூர் உதவி கலெக்டர் விமல்ராஜ், சுகாதார பணிகள் துணை இயக்குனர் செல்வகுமார், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சேகர், தாசில்தார் வெங்கடேசன், தளி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உமா மகேஸ்வரி, தேவராஜ், தேன்கனிக்கோட்டை பேரூராட்சி முன்னாள் தலைவர் நாகேஷ், அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் சம்பங்கி ராமரெட்டி, ஒன்றிய செயலாளர்கள் கிருஷ்ணன், ஜாகீர் உசேன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com