வேளாண் பல்கலைக்கழகத்தில் பணி நிரந்தரம் செய்யக்கோரி பண்ணை தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்

பணி நிரந்தரம் செய்யக்கோரி கோவை வேளாண் பல்கலைக்கழக பண்ணை தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேளாண் பல்கலைக்கழகத்தில் பணி நிரந்தரம் செய்யக்கோரி பண்ணை தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்
Published on

வடவள்ளி,

கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் பண்ணைகளில் தினக்கூலி அடிப்படையில் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று பல்கலைக்கழக நிர்வாகத்திடம் வலியுறுத்தி வந்தனர். ஆனால் அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப் படுகிறது.

இந்த நிலையில் கோவை வேளாண் பல்கலைக்கழக நிர்வாக வளாகத்தில் நேற்று காலை 8 மணிய ளவில் பண்ணை தொழிலாளர்கள் அமர்ந்து திடீரென்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட் டனர்.

இது குறித்து பண்ணை தொழிலாளர்கள் சங்க தலைவர் சுரேஷ்குமார் கூறியதாவது:-

கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தில் 10 ஆண்டுகளுக்கு மேலாக தினக்கூலிகளாக வேலை பார்த்து வருகிறோம். எங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். காலியாக உள்ள பணியிடங்களில் தகுதி வாய்ந்த தினக்கூலிகளையே நேர்காணல் மூலம் நிரப்ப வேண்டும். தினக்கூலி மற்றும் தொகுப்பு ஊதிய அடிப்படையில் பணியாற்றும் ஐ.டி.ஐ., டிப்ளமோ படித்தவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும். பணி ஓய்வு பெற்றவர்களுக்கு பிடித்தம் செய்த சம்பளத்தொகையை உடனே வழங்க வேண்டும்.

இறந்து போன தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு வேலை தர வேண்டும். அனைத்து தினக்கூலி தொழிலாளர்களுக்கும் வருங்கால வைப்பு நிதி பிடித்தம் செய்ய வேண்டும். வாரத்தில் குறைந்தது 5 நாட்கள் வேலை வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை பல்கலைக்கழக நிர்வாகத்திடம் வலியுறுத்தி வருகிறோம். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி வேளாண் பல்கலைக் கழகத்தில் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இது குறித்து கோவை வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் ராமசாமியிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:-

கடந்த 5 ஆண்டுகளில் 2 ஆயிரத்து 432 தினக்கூலி பணியாளர்களை 3 தவணைகளில் பணி நிரந்தரம் செய்துள்ளோம். அப்போது அதற்கு வழிவகை இருந்தது. ஆனால் தற்போது அனைத்து பணிகளையும் ஒப்பந்த அடிப்படையில் விடும்படி அரசிடம் இருந்து உத்தரவு கிடைத் துள்ளது.

கடந்த ஆண்டுகளில் சில தவறுகள் நடந்துள்ளன. அதை சரி செய்ய பல வழிகளில் நாங்கள் முயற்சி எடுத்துள்ளோம். தொடர்ச்சியாக வேலை தர வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. எங்கள் கைகள் கட்டப் பட்டு உள்ளன. எங்களால் இயன்ற அளவு அவர்களுக்கு வேலை கொடுக்கப்படுகிறது. வேலைக்கு ஆட்கள் தேவை இருக்கும் போது எடுத்துக்கொள்கிறோம். அவர்களின் நிலை அறிந்து சம்பளத்தையும் உயர்த்தி உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து மதியம் 1.30 மணியளவில் பண்ணை தொழிலாளர்கள் சங்க தலைவர் சுரேஷ்குமாரை, பி.ஆர்.ஜி.அருண்குமார் எம்.எல்.ஏ. செல்போனில் தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர், பண்ணை தொழிலாளர்களின் கோரிக்கைகளை முதல்- அமைச்சர் மற்றும் வேளாண் துறை அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததாக தெரிகிறது. அதைத்தொடர்ந்து பண்ணை தொழிலாளர்கள் தங்கள் வேலை நிறுத்தத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com