கோயம்பேடு பஸ் நிலையத்தில் 50 கிலோ கஞ்சாவை கடத்த முயன்ற 3 பெண்கள் கைது

கோயம்பேடு பஸ் நிலையத்தில் 50 கிலோ கஞ்சாவை கடத்த முயன்ற 3 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
கோயம்பேடு பஸ் நிலையத்தில் 50 கிலோ கஞ்சாவை கடத்த முயன்ற 3 பெண்கள் கைது
Published on

பூந்தமல்லி,

சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு கஞ்சா கடத்தப்படுவதாக வந்த தகவலை அடுத்து கோயம்பேடு உதவி கமிஷனர் ஜான்சுந்தர், இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் ஆகியோர் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டது. பஸ் நிலைய பகுதியில் தனிப்படை போலீசார் தீவிரமாக மாறுவேடத்தில் கண்காணித்து வந்தனர்.

கள்ளக்குறிச்சி செல்லும் பஸ்சில் சந்தேகத்துக்கிடமாக 3 பெண்கள் அதிக பைகளுடன் செல்வதாக வந்த தகவலால் அங்கு சென்று போலீசார் அந்த பெண்களை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர்.

இதனால் அவர்கள் கொண்டு வந்த பைகளை பிரித்து சோதனை செய்தபோது அதில் பண்டல்களாக சுற்றப்பட்டு சுமார் 50 கிலோ கஞ்சா இருந்தது. மேலும் விசாரணையில் அவர்கள் ஆந்திராவை சேர்ந்த நாகமணி (வயது 30), குமாரி (21), சேலத்தை சேர்ந்த கல்பனா (28) என தெரியவந்தது. போலீசார் விசாரணையில் மேலும் கிடைத்த தகவல்கள் வருமாறு:-

கல்பனா சேலம், கள்ளக்குறிச்சி பகுதிகளில் கஞ்சாவை கடத்தி சென்று விற்பனை செய்து வந்துள்ளார். கஞ்சாவை ஆந்திராவில் இருந்து வாங்கி அதை ஒரே நபர் எடுத்து சென்றால் போலீசாருக்கு சந்தேகம் வரும் என்பதால் ஆந்திராவில் கஞ்சாவை மொத்தமாக கொடுக்கும் 2 பெண்களை உடன் அழைத்துக்கொண்டு வந்துள்ளார்.

கஞ்சாவை சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்த்தவுடன் அதற்கான தொகையை வாங்கி கொண்டு ஆந்திர பெண்கள் இருவரும் தங்கள் மாநிலத்துக்கு சென்று விடுவார்கள். மேலும் ஞாயிற்றுக் கிழமைகளில் போலீசாரின் கெடுபிடி அதிகமாக இருக்காது என்று இவர்கள் கஞ்சா கடத்துவதற்காக ஞாயிற்றுக்கிழமையை தேர்வு செய்து இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து சுமார் 50 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இவர்களின் பின்னணியில் இருப்பவர்கள் யார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com