

கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி வேட்டியம்பட்டி காமராஜ் நகரை சேர்ந்தவர் நாகராஜ். போட்டோகிராபர். இவரது மனைவி மீனா (வயது 25). இவர் நேற்று மதியம் 12.30 மணி அளவில் வீட்டில் தனியாக இருந்தார். அந்த நேரம் மோட்டார்சைக்கிளில் 2 பேர் வந்தனர். அவர்கள் தாங்கள் நகைகளுக்கு பாலீஷ் போடுபவர்கள். உங்களுக்கு நகை எதுவும் பாலீஷ் போட வேண்டுமா? என்று கேட்டனர்.
அதற்கு மீனா தனக்கு நகைகள் எதுவும் பாலீஷ் போட வேண்டாம் என்று கூறினார். இதைத் தொடர்ந்து அவர்கள் குடிக்க தண்ணீர் கேட்டனர். இதையடுத்து மீனா வீட்டிற்குள் சென்று தண்ணீர் எடுத்து வந்து கொடுத்தார். தண்ணீரை குடித்த அவர்கள் தாங்கள் வைத்திருந்த நகை ஒன்றை பாலீஷ் செய்து காட்டினார்கள்.
நகை முன்பு எப்படி இருந்தது. தற்போது எப்படி இருக்கிறது என்று அவரிடம் கூறினார்கள். இதைத் தொடர்ந்து மீனாவிடம் அவர் அணிந்திருந்த 4 பவுன் தங்க சங்கிலியை கழற்றி தருமாறும் பாலீஸ் போட்டு தருவதாகவும் கூறினார்கள். இதை நம்பி மீனா நகையை கொடுத்தார். அப்போது நகைக்கு பாலீஷ் போட்ட அவர்கள் மீண்டும் குடிக்க தண்ணீர் கேட்டனர். பிறகு மஞ்சள் தூள் கொண்டு வருமாறு கூறினார்கள்.
இதன் பின்னர் தண்ணீர் கொண்டு வந்த செம்பு பாத்திரத்தில் மஞ்சள் பொடியை தூவி, தங்க சங்கிலியை அதற்குள் போட்டு 15 நிமிடம் கழித்து எடுத்து பாருங்கள் என்று கூறி, பாலீஷ் செய்ததற்கான பணத்தை பெற்றுக் கொண்டு அவர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
இந்த நிலையில் சிறிது நேரம் கழித்து மீனா நகையை எடுப்பதற்காக பார்த்த போது அந்த செம்பில் நகை எதுவும் இல்லை. மர்ம நபர்கள் மீனாவின் கவனத்தை திசை திருப்பி அந்த 4 பவுன் நகையை அபேஸ் செய்து தப்பி சென்றது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த மீனா இது குறித்து தனது கணவருக்கு தகவல் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து அவர்கள் கிருஷ்ணகிரி டவுன் போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார், நகைக்கு பாலீஷ் போடுவதாக கூறி 4 பவுன் நகையை அபேஸ் செய்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார் கள்.