மருத்துவ கல்லூரியில் இடம் வாங்கி தருவதாக கூறி ரூ.25 லட்சம் மோசடி ஒருவர் கைது

சென்னை தொழில் அதிபரின் மகளுக்கு மருத்துவ கல்லூரியில் இடம் வாங்கி தருவதாக கூறி ரூ.25 லட்சம் பெற்று மோசடி செய்ததாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.
மருத்துவ கல்லூரியில் இடம் வாங்கி தருவதாக கூறி ரூ.25 லட்சம் மோசடி ஒருவர் கைது
Published on

திருவள்ளூர்,

சென்னை கொளத்தூர் புதிய லட்சுமிபுரம் வ.உ.சி. தெருவை சேர்ந்தவர் தொழில் அதிபர் முருகன். மீன் பண்ணை நடத்தி வருகிறார். இவர் தன் மகளை மருத்துவ கல்லூரியில் சேர்க்க 2016-ம் ஆண்டு முயற்சி மேற்கொண்டார். இதற்காக திருவள்ளூரை அடுத்த பூண்டியை சேர்ந்த சந்திரனை (வயது 49) தொடர்பு கொண்டார்.

அப்போது சேலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவ கல்லூரியில் தரகர்கள் ஜெயச்சந்திரன், ராமசாமி ஆகியோர் மூலமாக இடம் வாங்கி தருவதாகவும், அதற்கு ரூ.38 லட்சம் தர வேண்டும் என்றும் முருகனிடம், சந்திரன் கூறி உள்ளார். இதையடுத்து முதல் தவணையாக ரூ.25 லட்சத்தை சந்திரனிடம், முருகன் கொடுத்தார்.

அதை பெற்றுக்கொண்ட சந்திரன் தனக்கு கமிஷனாக ரூ.2 லட்சத்தை எடுத்துக்கொண்டு மருத்துவ கல்லூரி உரிமையாளரிடம் ரூ.23 லட்சத்தை கொடுத்ததாக முருகனிடம் கூறினார். ஆனால் சந்திரன் கூறியபடி மருத்துவ கல்லூரியில் இடம் வாங்கி தரவில்லை.

இதனால் தான் கொடுத்த பணத்தை திருப்பி தரும்படி சந்திரனிடம், முருகன் வற்புறுத்தினார். பணத்தை தராமல் காலம் தாழ்த்திய சந்திரன் ஒரு கட்டத்தில் தலைமறைவானார்.

இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த முருகன் இது குறித்து திருவள்ளூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்கரவர்த்தி உத்தரவின் பேரில் துணை சூப்பிரண்டு கண்ணப்பன், இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி, சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜேந்திரன், வாசுதேவன் ஆகியோர் கொண்ட தனிப்படை போலீசார் சந்திரனை தேடி வந்தனர்.

இந்நிலையில் திருவள்ளூரில் பதுங்கி இருந்த சந்திரனை தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் போலீசார் அடைத்தனர். மேலும் இது தொடர்பாக தரகர்கள் ஜெயச்சந்திரன், ராமசாமி, தனியார் கல்லூரி உரிமையாளர் ஆகியோர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com