திருச்சி அருகே தனியார் பள்ளியில் ரூ.3 லட்சம் திருட்டு

திருச்சி அருகே தனியார் பள்ளி ஒன்றில் ரூ.3 லட்சம் திருட்டு போனது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி அருகே தனியார் பள்ளியில் ரூ.3 லட்சம் திருட்டு
Published on

கொள்ளிடம் டோல்கேட்,

திருச்சி நெ.1 டோல்கேட் அருகே நியூ நேருநகரில் புனித மேரிஸ் என்ற பெயரில் தனியார் பள்ளி உள்ளது. இங்கு 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை மாணவர்கள் படித்து வருகின்றனர். ராஜகோபால்நகரை சேர்ந்த சுரேஷ்சந்தர்(வயது 58) என்பவர் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை சுரேஷ்சந்தர், பள்ளியில் வேலைகளை முடித்து விட்டு அவருக்கு சொந்தமான ரூ.3 லட்சத்தை அறையில் உள்ள மேஜை டிராயரில் வைத்து விட்டு பள்ளியை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டார். நேற்று காலை பணத்தை எடுப்பதற்காக பள்ளிக்கு சென்ற அவர், மேஜை டிராயரை திறந்து பார்த்தபோது அங்கிருந்த பணம் மாயமாகி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அறை முழுவதும் பணத்தை தேடிப்பார்த்தார். ஆனால், பணம் கிடைக்கவில்லை.

போலீசார் விசாரணை

இதுகுறித்து கொள்ளிடம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் பள்ளிக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், சுரேஷ்சந்தர் கடந்த சில மாதங்களுக்கு முன் நிலத்தை பத்திரப்பதிவு செய்வதற்காக தனது வங்கி கணக்கில் இருந்து ரூ.3 லட்சத்தை எடுத்து வந்து அவரது அறையில் உள்ள மேஜை டிராயரில் வைத்து விட்டு, பள்ளியை பூட்டிவிட்டு அனைத்து சாவிகளையும் பள்ளியில் வழக்கம்போல் வைக்கும் இடத்தில் வைத்துவிட்டு வீட்டுக்கு சென்றதும், இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் சாவியை எடுத்து இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இதுகுறித்து சுரேஷ்சந்தர் கொடுத்த புகாரின் பேரில் கொள்ளிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com