எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு மேலும் ஒரு சிறுமி பலி

எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதித்த சிறுமி டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டடு சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக உயிரிழந்தாள்.
எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு மேலும் ஒரு சிறுமி பலி
Published on

சென்னை,

சென்னை அசோக்நகர் பகுதியை சேர்ந்தவர் கண்ணதாசன். இவரது மனைவி மாலதி. இவர்களுக்கு திவ்ய தர்ஷனி (வயது 8) என்ற மகள் இருந்தாள். திவ்ய தர்ஷனி கடந்த 1 வாரத்துக்கு முன்பு காய்ச்சல் காரணமாக நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள், அவளுக்கு டெங்கு காய்ச்சல் இருப்பதை உறுதி செய்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து சிறுமியை அவரது பெற்றோர் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு டாக்டர்கள் சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளித்துவந்தனர். ஆனாலும் திவ்ய தர்ஷனி சிகிச்சை பலன் இன்றி நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக உயிரிழந்தாள்.

இது குறித்து டாக்டர்களிடம் கேட்டபோது, பரிசோதனை முடிவு வந்த பிறகே, திவ்ய தர்ஷனி டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தாரா? என்பது குறித்து கூறமுடியும் என தெரிவித்தனர். இதேபோல் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த, பெரியமேடு பகுதியை சேர்ந்த அக்ஷிதா என்ற 7 வயது சிறுமியும், புழல் பகுதியை சேர்ந்த அரவிந்தன் என்ற 10 வயது சிறுவனும் மர்ம காய்ச்சலால் நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com