

சிக்கமகளூரு,
சிக்கமகளூரு மாவட்டம் கொப்பா தாலுகா குட்டேதொட்டா கிராமத்தை சேர்ந்தவர் விஜய ராகவன். விவசாயியான இவர் தனது மனைவி மஞ்சுளாவுடன் ஊருக்கு ஒதுக்குபுறமாக உள்ள பண்ணை வீட்டில் வசித்து வருகிறார். இந்த பண்ணை வீட்டில் ஜெயந்த் என்பவர் இரவு நேரத்தில் மட்டும் காவலாளியாக வேலை சய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு விஜயராகவன் தனது மனைவி மஞ்சுளாவுடன் சாப்பிட்டுவிட்டு வீட்டில் தூங்கி கொண்டு இருந்தார். ஜெயந்த் வழக்கம்போல காவல் பணியில் ஈடுபட்டார்.
இந்த நிலையில் நேற்று அதிகாலை 2 மணியளவில் அந்த பண்ணை வீட்டிற்கு 2 கார்கள், ஒரு சரக்கு வேனில் 20 பேர் வந்தனர். அவர்கள் காவலில் ஈடுபட்டு இருந்த ஜெயந்தை பிடித்து சரமாரியாக தாக்கினார்கள். பின்னர் ஜெயந்தின் கால், கைகளை கட்டி போட்ட 20 பேர் கொண்ட கும்பல், அவர் வாயில் துணியை வைத்து திணித்தனர்.
இதையடுத்து விஜய ராகவனின் வீட்டின் கதவை அந்த 20 பேரும் சேர்ந்து பலமாக தட்டினார்கள். இதனால் விஜய ராகவனும், மஞ்சுளாவும் திடுக்கிட்டு எழுந்தனர். ஏதோ வீபரீதம் நடக்க போகிறது என்பதை உணர்ந்த அவர்கள் கதவை திறக்கவில்லை. ஆனாலும் 20 பேரும் சேர்ந்து கதவை உடைத்து கொண்டு பண்ணை வீட்டிற்குள் புகுந்தனர்.
மேலும் வீட்டில் இருந்த விஜய ராகவனையும், மஞ்சுளாவையும் அந்த 20 பேரும் சேர்ந்து சரமாரியாக தாக்கினார்கள். பின்னர் அவர்கள் 2 பேரின் கை, கால்களையும் கட்டிப்போட்ட மர்மநபர்கள் வாயில் துணியை வைத்து திணித்தனர். பின்னர் வீட்டில் இருந்த பீரோவை திறந்த 20 பேரும் அதில் இருந்த நகை, பணம், 3 செல்போன்களை கொள்ளையடித்தனர். இதையடுத்து அங்கிருந்து 20 பேரும் தாங்கள் வந்த கார்கள், சரக்கு வேனில் தப்பித்து சென்று விட்டனர்.