

வேதாரண்யம்,
கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு ஆக்சிஜன் வசதி தேவைப்படுகிறது. கொரோனா 2-ம் அலையின்போது பல்வறு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்பட்டன. இதையடுத்து அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் உள்ள அரசு தலைமை மருத்துவமனை பல்வேறு கிராமங்களுக்கு பயனளிக்கும் விதத்தில் அமைந்து உள்ளது. இங்கு கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் வேதாரண்யம் மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவி வந்தது. இதையடுத்து ஆக்சிஜன் பற்றாக்குறையை போக்க வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் ரூ.75 லட்சம் செலவில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டது.
அதன்படி அங்கு ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்துக்கான கட்டிட பணிகள் கடந்த 2 மாதங்களாக நடைபெற்று வந்தன. நேற்று ஆக்சிஜன் உற்பத்தி செய்யக்கூடிய கருவிகள் மற்றும் சிலிண்டர்கள் கொண்டுவரப்பட்டு அவற்றை பொருத்தும் பணி நடைபெற்றது.
வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி விரைவில் தொடங்கும் எனவும், கொரோனா 3-ம் அலை வந்தாலும் அதை எதிர்கொள்ள இந்த ஆக்சிஜன் உற்பத்தி மையம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எனவும் டாக்டர்கள் கூறினர்.