மிரா-பயந்தர் மாநகராட்சி கூட்டத்தில் சிவசேனா கவுன்சிலர்கள் திடீர் ரகளை நாற்காலி, கணினிகளை நொறுக்கியதால் பரபரப்பு

மிரா-பயந்தர் மாநகராட்சி கூட்டத்தில் சிவசேனா கட்சி கவுன்சிலர்கள் ரகளையில் ஈடுபட்டனர். மேலும் அங்கிருந்த நாற்காலிகள் மற்றும் கணினிகளை அடித்து நொறுக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மிரா-பயந்தர் மாநகராட்சி கூட்டத்தில் சிவசேனா கவுன்சிலர்கள் திடீர் ரகளை நாற்காலி, கணினிகளை நொறுக்கியதால் பரபரப்பு
Published on

மும்பை,

தானே மாவட்டம் மிரா-பயந்தர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட மும்பை- ஆமதாபாத் நெடுஞ்சாலை அருகே தகிசர் சோதனை சாவடி பகுதியில் மறைந்த சிவசேனா தலைவர் பால்தாக்கரே பெயரில் கலாசார கலையரங்கம் அமைக்கப்பட உள்ளது. இதற்கு கடந்த 2015-ம் ஆண்டே உத்தவ் தாக்கரே அடிக்கல் நாட்டினார். ஆனால் பா.ஜனதா அதிகாரத்தில் இருக்கும். மிரா-பயந்தர் மாநகராட்சி இன்னும் அந்த கலையரங்கம் அமைப்பதற்கான எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை என தெரிகிறது.

இந்தநிலையில், மிரா-பயந்தர் மாநகராட்சி நிலைக்குழு கமிட்டி கூட்டம் நேற்று காலை நடந்தது. இதில் சிவசேனா கட்சியை சேர்ந்த 22 கவுன்சிலர்களும், பா.ஜனதா கட்சியை சேர்ந்த 61 கவுன்சிலர்களும் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் பால்தாக்கரே பெயரில் அமைய உள்ள கலையரங்க பணிகள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என சிவசேனா கவுன்சிலாகள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் அந்த அறிவிப்பே நிலைக்குழு கூட்ட கொள்கை குறிப்பேட்டில் இடம் பெறவில்லை.

இதனால் ஆத்திரம் அடைந்த சிவசேனா கவுன்சிலர்கள் அங்கு ரகளையில் ஈடுபட்டனர். மேலும் பா.ஜனதா கட்சிக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினார்கள்.

திடீரென அங்கிருந்த நாற்காலிகளை தூக்கி வீசினர். மேலும் கணினிகள், பைல்கள், கண்ணாடி பொருட்களை அடித்து உடைத்து சூறையாடினார்கள். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ரகளையில் ஈடுபட்ட கவுன்சிலர்கள் மீது விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com