கொரோனா சிகிச்சை மைய திறப்பு விழாவில் ஒன்றாக கலந்து கொண்ட அஜித்பவார், தேவேந்திர பட்னாவிஸ்

புனே பாலேவாடி பகுதியில் நேற்று கொரோனா சிகிச்சை மைய திறப்பு விழா நடந்தது. விழாவில் துணை முதல்-மந்திரி அஜித் பவாரும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிசும் ஒன்றாக கலந்து கொண்டனர். விழாவில் 2 பேரும் அருகருகே நின்று கொண்டு இருந்தனர்.
கொரோனா சிகிச்சை மைய திறப்பு விழாவில் ஒன்றாக கலந்து கொண்ட அஜித்பவார், தேவேந்திர பட்னாவிஸ்
Published on

புனே,

மராட்டியத்தில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி உறுதி செய்யப்பட்டு பதவி ஏற்க இருந்தநிலையில், அஜித் பவார் பாரதீய ஜனதாவுடன் இணைந்து கடந்த ஆண்டு நவம்பர் 23-ந் தேதி துணை முதல்-மந்தியாக பதவி ஏற்றார். தேவேந்திர பட்னாவிஸ் முதல்-மந்திரி ஆனார். எனினும் போதிய எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இல்லாததால் பொறுப்பேற்ற 80 மணி நேரத்தில் அந்த ஆட்சி கவிழ்ந்தது. அதன்பிறகு சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி அரசு உருவானது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் அஜித்பவாரும், தேவேந்திர பட்னாவிசும் ஒன்றாக விழாவில் கலந்து கொண்டது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த விழாவில் பாரதீய ஜனதா மாநில தலைவர் சந்திரகாந்த் பாட்டீல், புனே மேயர் முரளிதர் மகோல் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com