பழவந்தாங்கல் ரெயில் நிலையத்தில் 30 அடி நீள தடுப்பு சுவர் இடித்து அகற்றம்

எக்ஸ்பிரஸ் ரெயில்களில் பயணம் செய்பவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பழவந்தாங்கல் ரெயில் நிலையத்தில் 4-வது நடைமேடை அருகே இடையூறாக இருந்த 30 அடி நீள தடுப்பு சுவரை அதிகாரிகள் நேற்று இடித்து தள்ளினார்கள்.
பழவந்தாங்கல் ரெயில் நிலையத்தில் 30 அடி நீள தடுப்பு சுவர் இடித்து அகற்றம்
Published on

ஆலந்தூர்,

பரங்கிமலை ரெயில் நிலையத்தில் 5 பேரை பலிவாங்கிய தடுப்பு சுவரையும் இடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த மாதம் 24-ந் தேதி பரங்கிமலை ரெயில் நிலைய 4-வது நடைமேடையில் திருமால்பூருக்கு சென்ற மின்சார விரைவு ரெயிலில் படிக்கட்டில் பயணம் செய்த 5 பேர் அங்கு இருந்த தடுப்பு சுவரில் மோதியதில் பலியானார்கள்.

இந்த விபத்து பற்றி காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா, ரெயில்வே கூடுதல் டி.ஜி.பி. சைலேந்திரபாபு, ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் மனோகரன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

அப்போது அடிக்கடி விபத்து ஏற்படுவதால் உயிர் பலி நிகழ்வதாகவும் பரங்கிமலை ரெயில் நிலைய 4-வது நடைமேடை அருகே உள்ள தடுப்பு சுவரை அகற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த நிலையில் கடந்த 30-ந் தேதி ரெயில்வே பாதுகாப்பு அதிகாரிகள் பொதுமக்களிடம் கருத்துகளை கேட்டறிந்தனர்.

அப்போது பழவந்தாங்கல் ரெயில் நிலையத்தின் 4-வது நடைமேடை வழியாக தென்மாவட்டங்களுக்கு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் செல்லும்போது இடையூறாக தடுப்பு சுவர்கள் இருப்பது கண்டு அறியப்பட்டது. அந்த சுவரை அப்புறப்படுத்த வேண்டும் என்ற கருத்து பலரால் தெரிவிக்கப்பட்டது.

நேற்று காலை ரெயில்வே பாதுகாப்பு அதிகாரிகளும், ரெயில்வே போலீசாரும் ஆய்வு செய்து பழவந்தாங்கல் ரெயில் நிலையத்தின் 4-வது நடைமேடை அருகே அமைக்கப்பட்டு இருந்த தடுப்பு சுவரை சுமார் 30 அடி நீளத்திற்கு இடித்து அகற்றினார்கள்.

இதனால் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் பயணம் செய்பவர்கள் எந்தவித அச்சமின்றி செல்ல முடியும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அவர்கள் மேலும் கூறுகையில், பரங்கிமலை ரெயில் நிலையத்தில் 5 பேர் பலியான விபத்துக்கு காரணமான தடுப்பு சுவரையும் இடித்து அகற்ற ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் அதை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.

ரெயில்நிலையங்களில் உள்ள நடைமேம்பாலங்களில் இருந்து ரெயில்களுக்கு மின்சார இணைப்பு வழங்க வைக்கப்பட்டு உள்ள இரும்பு தூண்களும் பாதிப்பாக உள்ளதால் அவற்றையும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com