போலீஸ் நிலையத்தில் அ.தி.மு.க. பிரமுகரை தாக்கிய இன்ஸ்பெக்டர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

மணப்பாறை போலீஸ் நிலையத்தில் அ.தி.மு.க பிரமுகரை தாக்கிய இன்ஸ்பெக்டர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.
போலீஸ் நிலையத்தில் அ.தி.மு.க. பிரமுகரை தாக்கிய இன்ஸ்பெக்டர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்
Published on

மணப்பாறை,

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த கருங்குளத்தைச் சேர்ந்தவர் பழனிச்சாமி(வயது 53). எம்.ஜி.ஆர். மன்ற மாவட்ட துணைச் செயலாளரான இவர் ஏற்கனவே 2 முறை மாவட்ட கவுன்சிலராக இருந்தார். தற்போது மணப்பாறையில் வசித்து வரும் பழனிச்சாமி நேற்று முன்தினம் இரவு நண்பர் ஒருவரின் குடும்ப பிரச்சினை தொடர்பாக மணப்பாறை போலீஸ் நிலையத்துக்கு சென்றார்.

அப்போது பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் கென்னடிக்கும் பழனிச்சாமிக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு இருவரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால் ஆத்திரமடைந்த இன்ஸ்பெக்டர் கென்னடி பழனிச்சாமியை சரமாரியாக அடித்து உதைத்தார். போலீஸ் நிலையத்தில் வைத்து தாக்குதல் நடத்தியதால் நிலை குலைந்து போன பழனிச்சாமி என்னசெய்வதென்று தெரியாமல் கதறி அழுதார். இதில் அவரது சட்டையும் கிழிந்தது. பின்னர் அங்கிருந்தவர்கள் உடனடியாக இதுபற்றி கட்சி நிர்வாகிகளுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து அ.தி.மு.க நிர்வாகிகள் போலீஸ் நிலையத்துக்கு திரண்டு வந்தனர்.

இதை அறிந்த இன்ஸ்பெக்டர் கென்னடி போலீஸ் நிலையத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டுச் சென்று விட்டார். ஏற்கனவே உடல்நிலை சரியில்லாமல் இருந்த பழனிச்சாமியை இன்ஸ்பெக்டர் தாக்கியதில் முகம் முழுவதுமாக வீங்கியது.

இதனால் ஆத்திரமடைந்த கட்சி நிர்வாகிகள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்ஸ்பெக்டர் கென்னடி மீது வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் மணப்பாறை போலீஸ் துணை சூப்பிரண்டு ஆசைத்தம்பி பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். இதையடுத்து போராட்டம் நடத்தியவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தையடுத்து இன்ஸ்பெக்டர் கென்னடி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com