பொங்கல் விழாவில் அதிகாரி சகாயம் அமர்ந்த தென்னை மர இருக்கை ரூ.11 ஆயிரத்திற்கு விற்பனை

கரம்பக்காடு பொங்கல் விழாவில் கலந்து கொண்ட ஐ.ஏ.எஸ்.அதிகாரி சகாயம் அமர்ந்திருந்த தென்னை மர இருக்கை ரூ. 11 ஆயிரத்திற்கு விற்பனை ஆனது.
பொங்கல் விழாவில் அதிகாரி சகாயம் அமர்ந்த தென்னை மர இருக்கை ரூ.11 ஆயிரத்திற்கு விற்பனை
Published on

கீரமங்கலம்,

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் பகுதியில் புயலால் சாய்ந்த தென்னை மரங்களை வெட்டி அகற்ற முடியாமல் விவசாயிகள் தவித்து வரும் நிலையில் விவசாயிகளுக்கு உதவி செய்யும் நோக்கத்தில் களமிறங்கிய நண்பர்கள் விவசாயிகள் மீட்புக்குழுவினர் கீரமங்கலம் அருகில் உள்ள நெய்வத்தளி, மேற்பனைக்காடு கிராமங்களில் சில விவசாயிகளின் தோட்டங்களை சீரமைத்தனர். அதில் தென்னை மரங்களின் அடி மற்று நுனி பகுதி கள் வீணாகி ஒதுக்கப்படுவதை அழகிய இருக்கைகளாகவும், மேஜைகளாகவும் வடிவமைத்தனர். அந்த இருக்கைகளை மேலும் மெருகூட்டி கடந்த வாரம் கரம்பக்காடு கிராமத்தில் நடந்த பொங்கல் விழாவில் மேடைகளில் வைத்திருந்தனர்.

விழாவில், ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தென்னை மர இருக்கைகளை பார்த்து இதே போல எடை குறைவாக வடிவமைத்தால் சிறப்பாக இருக்கும் என்று கூறியதுடன் அந்த இருக்கையில் அமர்ந்திருந்து கலை நிகழ்ச்சிகளை பார்த்தார். மேலும் இதே போல விவசாயிகளின் விளை பொருட்களை மதிப்புகூட்டி விற்பனைக்கு அனுப்ப வேண்டும் என்று அப்போது அவர் பேசினார்.

அதன் பிறகு அந்த இருக்கையை சிலர் தங்களுக்கு வேண்டும் என்று விலைக்கு கேட்டிருந்தனர். இந்த நிலையில் புதுச்சேரியை சேர்ந்த சீனிவாசன் என்பவர் ரூ. 10 ஆயிரத்திற்கு அந்த இருக்கையை கேட்டிருந்தார். அதே இருக்கையை அலஞ்சிரங்காடு குருகுலம் பள்ளி நிர்வாகி சிவநேசன் ரூ.11 ஆயிரத்திற்கு வாங்கியுள்ளார். இருப்பினும் அந்த இருக்கைக்கு மேலும் சிலர் போட்டி போட்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com