

சேலம்,
சென்னை அண்ணா நகரை சேர்ந்தவர் சாம்பார் பிரகாஷ் (வயது 26). இவரை திருட்டு வழக்கில் நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை போலீசார் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்திருந்தனர்.
இவர், சிறையில் அடிக்கடி அதிகாரிகளிடம் தகராறு செய்வதை வாடிக்கையாக கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. ஏற்கனவே 2 முறை பிளேடால் தனது உடலை அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இந்தநிலையில், கடந்த 7-ந் தேதி சிறையில் உள்ள அறையில் இருந்த கைதி பிரகாஷ் திடீரென பிளேடால் தனது கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சிறை அதிகாரிகள் அவரை உடனே மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக ஜெயிலர் மதிவாணன் சார்பில் அஸ்தம்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் கைதி பிரகாஷ் தற்கொலை முயற்சி செய்ததாக அஸ்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.