தோவாளை பஞ்சாயத்து அலுவலகத்தில் தலைவர், வார்டு உறுப்பினர்கள் உள்ளிருப்பு போராட்டம் - அதிகாரி பேச்சுவார்த்தையில் உடன்பாடு

தோவாளை பஞ்சாயத்து அலுவலகத்தில் தலைவர், வார்டு உறுப்பினர்கள் திடீரென உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அதிகாரி பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.
தோவாளை பஞ்சாயத்து அலுவலகத்தில் தலைவர், வார்டு உறுப்பினர்கள் உள்ளிருப்பு போராட்டம் - அதிகாரி பேச்சுவார்த்தையில் உடன்பாடு
Published on

ஆரல்வாய்மொழி,

தோவாளை பஞ்சாயத்து தலைவராக நெடுஞ்செழியன் உள்ளார். இவர் நேற்று காலை 11 மணிக்கு துணை தலைவர் தாணு, வார்டு உறுப்பினர்கள் சிவகாமி, ராமலட்சுமி, மணிகண்டன், சரஸ்வதி, இசக்கி முத்து ஆகியோருடன் பஞ்சாயத்து அலுவலகத்தில் திடீரென உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.

பஞ்சாயத்துகளுக்கு அரசு வழங்கும் மாதாந்திர நிதி வரவில்லை, வளர்ச்சி பணிகளுக்கு ரூ.32 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தும், அதற்கான வளர்ச்சி பணிகளை சமர்ப்பித்தும் மதிப்பீடு செய்ய வரவில்லை, கொரோனா கால கட்டத்தில் சிறப்பு நிதி வழங்கவில்லை ஆகியவற்றை கண்டித்து போராட்டத்தில் ஈடுபடுவதாக தலைவர் நெடுஞ்செழியன் தெரிவித்தார்.

இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்ததும் வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) ஜெயந்தி அங்கு விரைந்து வந்து தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து அனைவரும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com