திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் முற்றுகை

மதுக்கடையை மீண்டும் திறக்க எதிர்ப்பு தெரிவித்து திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் முற்றுகை
Published on

திருவள்ளூர்,

சென்னை அம்பத்தூர் ஒரகடம் பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட ஏராளமான பொதுமக்கள், தங்கள் பகுதியில் மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து புரட்சி பாரதம் கட்சியின் அம்பத்தூர் நகர தலைவர் மதன் தலைமையில் நேற்று திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது அவர்கள், கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். இது தொடர்பாக அவர்கள் கூறியதாவது.

அம்பத்தூர் ஒரகடம் பகுதியில் நாங்கள் வசித்து வருகிறோம். ஒரகடம் காந்தி நெடுஞ்சாலையில் ஏற்கனவே அரசு மதுக்கடை இருந்தது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், பெண்கள், வேலைக்கு செல்வோர் என அனைத்து தரப்பு பொதுமக்களும் பாதிக்கப்பட்டதுடன், மருத்துவமனை மற்றும் கோவில்கள் அருகில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள அந்த மதுக்கடையை அகற்ற வேண்டும் என புகார் மனு அளித்தோம். இதனால் அந்த மதுக்கடை அகற்றப்பட்டது.

இந்தநிலையில் மூடப்பட்ட அந்த மதுக்கடையை மீண்டும் அதே இடத்தில் திறப்பதற்கான பணிகள் கடந்த சில நாட்களாக முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த மதுக்கடையை மீண்டும் திறந்தால் பெண்கள், மாணவிகள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுவார்கள்.

எனவே மூடப்பட்ட மதுக்கடையை மீண்டும் திறக்கக்கூடாது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்தே நாங்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

பின்னர் அவர்கள், இது தொடர்பான கோரிக்கை மனு மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லியிடம் அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட அவர் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com