கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் மகளுடன் இளம்பெண் தர்ணா

கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி, திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மகளுடன் இளம்பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் மகளுடன் இளம்பெண் தர்ணா
Published on

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த எளாவூர் தலையாரிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ரேவதி(வயது 27). இவர், நேற்று காலை தனது மகள் யாசினி(7) என்பவருடன் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் வந்தார்.

பின்னர் கணவருடன் தன்னை சேர்த்து வைக்கக்கோரி திடீரென அவர் தனது மகளுடன் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இது தொடர்பாக ரேவதி கூறியதாவது:-
எனக்கும், அதே பகுதியை சேர்ந்த கட்டிடத்தொழிலாளி அருள்(33) என்பவருக்கும் 9-11-2009-ல் திருமணம் நடந்தது. எங்களுக்கு யாசினி என்ற மகள் உள்ளார். எனது கணவர் மற்றும் அவரது பெற்றோர் கூடுதல் வரதட்சணை கேட்டு என்னை கொடுமைப்படுத்தியதுடன், வீட்டைவிட்டு என்னை விரட்டி அடித்தனர்.

மேலும் பொய்யான காரணங்களை கூறி விவாகரத்து கேட்டு பொன்னேரி கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். அந்த வழக்கை கோர்ட்டு தள்ளுபடி செய்தது. மீண்டும் நான் கணவருடன் சேர்ந்து வாழ சென்றேன். ஆனால் என்னை வீட்டுக்குள் சேர்க்காமல் மீண்டும் விரட்டி அடித்து விட்டனர். இதுபற்றி நான் கும்மிடிப்பூண்டி போலீசில் புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதற்கிடையில் எனது கணவர் அவரது பெற்றோர் உதவியுடன் 2-வது திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது. எனவே எனது கணவருடன் என்னை சேர்த்து வைக்க வேண்டும் என வலியுறுத்தி எனது மகளுடன் கலெக்டர் அலுவலகத்தில் இந்த தர்ணாவில் ஈடுபட்டு உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து அவர், இது தொடர்பாக கோரிக்கை மனுவை மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமாரிடம் அளித்தார். மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர், அதன் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com