வாழவச்சனூர் கல்லூரியில் இருந்து நீக்கப்பட்ட மாணவியை கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் சேர்க்க வேண்டும் - மாவட்ட முதன்மை நீதிபதி உத்தரவு

வாழவச்சனூர் கல்லூரியில் இருந்து நீக்கப்பட்ட மாணவியை கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் சேர்க்க வேண்டும் என்று மாவட்ட முதன்மை நீதிபதி உத்தரவிட்டார்.
வாழவச்சனூர் கல்லூரியில் இருந்து நீக்கப்பட்ட மாணவியை கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் சேர்க்க வேண்டும் - மாவட்ட முதன்மை நீதிபதி உத்தரவு
Published on

திருவண்ணாமலை,

திருவண்ணாமலையை அடுத்த வாழவச்சனூரில் அரசு வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம் உள்ளது. இங்கு சென்னையை சேர்ந்த மாணவி ஒருவர் படித்து வந்தார். அவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக உதவி பேராசிரியர் தங்க பாண்டியன் மீது புகார் கூறினார். மேலும் இதற்கு விடுதி காப்பாளர்களாக இருந்த 2 உதவி பேராசிரியைகள் உடந்தையாக இருந்ததாகவும் குற்றம் சாட்டினார்.

அதைத்தொடர்ந்து உதவி பேராசிரியர் தங்கபாண்டியன் கல்லூரியில் இருந்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். 2 உதவி பேராசிரியைகள் வேறு கல்லூரிக்கு மாற்றம் செய்யப்பட்டனர். பாலியல் புகார் கூறிய மாணவியை கோவை வேளாண் பல்கலைக்கழகம் திருச்சி வேளாண்மை கல்லூரிக்கு மாற்றம் செய்தது. ஆனால் மாணவி திருச்சி கல்லூரிக்கு செல்ல மறுத்தார்.

இதையடுத்து வேளாண் பல்கலைக்கழகம் அந்த மாணவியை கல்லூரியில் இருந்து நீக்கம் செய்தது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு பாதிக்கப்பட்ட மாணவி திருவண்ணாமலை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவில் மனு அளித்தார்.

அந்த மனுவில் தனக்கு திருச்சி வேளாண்மை கல்லூரியில் பாதுகாப்பு இருக்காது என்றும், கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படிக்க விரும்புகிறேன் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த மாவட்ட முதன்மை நீதிபதி மகிழேந்தி, பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவியை கோவை வேளாண் பல்கலைக்கழகம் நீக்கம் செய்த ஆணையை ரத்து செய்து மீண்டும் அந்த மாணவியை கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படிக்க வைக்க ஆணை பிறப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

இதற்கான நகல் கோவை வேளாண் பல்கலைக்கழக பதிவாளர் மற்றும் முதல் வருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com