கிருமாம்பாக்கம் அருகே மீனவர் மீது தாக்குதல்; 4 பேருக்கு வலைவீச்சு

கிருமாம்பாக்கம் அருகே மீனவரை தாக்கிய 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கிருமாம்பாக்கம் அருகே மீனவர் மீது தாக்குதல்; 4 பேருக்கு வலைவீச்சு
Published on

பாகூர்,

கிருமாம்பாக்கத்தை அடுத்த நரம்பை கிராமத்தில் உள்ள கோவிலில் கடந்த 3-ந் தேதி செடல் திருவிழா நடைபெற்றது. இந்த விழாவை பார்க்க பனித்திட்டு கிராமத்தை சேர்ந்த வாலிபர்கள் மோட்டார் சைக்கிள்களை வேகமாக சென்றனர். இதுபற்றி கேட்ட நரம்பை வாலிபர்களுக்கும், பனித்திட்டு வாலிபர்களுக்கும் தகராறு ஏற்பட்டது.

இதனால் இரு கிராமங்களுக்கு இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது. இதை அறிந்த கிருமாம்பாக்கம் போலீசார், 2 கிராமங்களை சேர்ந்த முக்கிய பிரமுகர்களை அழைத்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் நரம்பை கிராமத்தை சேர்ந்த மீனவர் சாந்தகுமார் (வயது 20), தனது நண்பர் விஷ்வா என்பவருடன் மோட்டார் சைக்கிளில் பிள்ளையார்குப்பம் வழியாக ஊருக்கு சென்றார்.

அப்போது பனித்திட்டு கிராமத்தை சேர்ந்த ராஜி, மரியதாஸ், தனவேலு, ரகுபதி ஆகியோர் கோவில் திருவிழாவில் ஏற்பட்ட மோதலை முன்விரோதமாக கொண்டு சாந்தகுமாரை வழிமறித்து தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதுபற்றி கிருமாம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் சாந்தகுமார் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரித்து ராஜி உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும், இரு கிராமத்தினர் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருவதால், சட்டம் - ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 2 கிராமங்களை சேர்ந்த 50 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com