கத்திமுனையில் லாரி டிரைவரை தாக்கி செல்போன்கள் பறிப்பு 2 வாலிபர்கள் கைது

காஞ்சீபுரம் அருகே கத்தி முனையில் சென்னையை சேர்ந்த லாரி டிரைவரை தாக்கி செல்போன்கள் பறித்த வழக்கில் 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
கத்திமுனையில் லாரி டிரைவரை தாக்கி செல்போன்கள் பறிப்பு 2 வாலிபர்கள் கைது
Published on

சென்னை,

சென்னை ராயபுரம் ஆண்டவர் மாதா கோவில் தெரு பகுதியில் வசிப்பவர் பாலாஜி (வயது 35). லாரி டிரைவர். இவர் கோவையில் இருந்து லாரியில் சென்னை ராயபுரத்திற்கு வந்து கொண்டு இருந்தார்.

காஞ்சீபுரம் அருகே சித்தேரிமேடு சாலை ஓரம் லாரியை நிறுத்திவிட்டு இரவில் தூங்கிக்கொண்டு இருந்தார்.

அப்போது 2 மர்ம நபர்கள், பாலாஜியை எழுப்பி கத்தியை காட்டி பணம், செல்போன் கேட்டு மிரட்டினர். பின்னர் அவரை தாக்கி அவரிடமிருந்து 2 செல்போன்களை பறித்து விட்டு தப்பி சென்றனர்.

இதுகுறித்து பாலாஜி, பாலுசெட்டிசத்திரம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ராஜாங்கம் (பொறுப்பு) தீவிர விசாரணை நடத்தி வந்தார். இதற்கிடையில், கீழம்பி என்ற இடத்தில் வாகன சோதனை செய்தபோது, 2 வாலிபர்கள் பிடிபட்டனர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததால், போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனே அவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று அங்கு துருவி துருவி விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் செல்போன் பறித்ததை ஒப்புக்கொண்டனர்.

இதையொட்டி, காஞ்சீபுரம் சித்தேரிமேடு பகுதியை சேர்ந்த விமல்ராஜ் (23), காஞ்சீபுரம் வெள்ளைக்கேட் சமத்துவபுரம் பகுதியை சேர்ந்த மதன் (21) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கைது செய்யப்பட்ட 2 பேரையும் காஞ்சீபுரம் குற்றவியல் கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினர். 15 நாட்கள் காவலில் வைக்க கோர்ட்டு உத்தரவிட்டது. பின்னர் காஞ்சீபுரம் சப்-ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com