விவசாய நிலத்தில் ஆடுகள் மேய்க்க கூடாது எனக்கூறியதால் ஆயுதங்களால் தாக்கி வாலிபர் கொலை 6 பேருக்கு போலீஸ் வலைவீச்சு

பெலகாவியில், தனது விவசாய நிலத்தில் ஆடுகள் மேய்க்க கூடாது எனக்கூறியதால் ஆயுதங்களால் தாக்கி வாலிபர் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 6 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
விவசாய நிலத்தில் ஆடுகள் மேய்க்க கூடாது எனக்கூறியதால் ஆயுதங்களால் தாக்கி வாலிபர் கொலை 6 பேருக்கு போலீஸ் வலைவீச்சு
Published on

பெலகாவி,

பெலகாவி மாவட்டம் காகதி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட முத்தாலட்டி கிராமத்தை சேர்ந்தவர் சித்தராமி நாயக் (வயது 30). இவர் விவசாயம் செய்து வந்தார். இவர், நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் தனது வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்மநபர்கள் சிலர் சித்தராமி நாயக்கிடம் சண்டை போட்டனர். இந்த நிலையில், மர்மநபர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களால் சித்தராமி நாயக்கை சரமாரியாக தாக்கினார்கள். இதில், பலத்த காயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார்.

உடனே அங்கிருந்து மர்ம நபர்கள் தப்பி ஓடிவிட்டனர். பின்னர் உயிருக்கு போராடிய சித்தராமி நாயக்கை உறவினர்கள் மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி சித்தராமி நாயக் பரிதாபமாக இறந்துவிட்டார். இதுபற்றி அறிந்ததும் காகதி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர். அப்போது சித்தராமி நாயக்கை 6 நபர்கள் கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களால் தாக்கி கொலை செய்தது தெரியவந்தது.

மேலும் நேற்று முன்தினம் மாலையில் சித்தராமி நாயக்கின் விவசாய நிலத்தில் ஆடுகள் மேய்ந்து கொண்டிருந்துள்ளது. உடனே சித்தராமி நாயக், தனது நிலத்தில் ஆடுகளை மேய்க்க கூடாது என அதன் உரிமையாளரிடம் கூறியுள்ளார். மேலும் அவர், ஆடுகளையும் அங்கிருந்து விரட்டி விட்டுள்ளார். இதுதொடர்பாக சித்தராமி நாயக் மற்றும் ஆடுகளின் உரிமையாளர் இடையே வாக்குவாதம் உண்டானது. இதனால் அந்த ஆடுகளின் உரிமையாளர் தனது நண்பர்களுடன் சேர்ந்து சித்தராமி நாயக்கை கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகப்படுகின்றனர்.

இதுகுறித்து காகதி போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகள் 6 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com