கலெக்டர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி

தேனி கலெக்டர் அலுவலகத்தில், மகளை கண்டுபிடித்து தரக்கோரி, பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
கலெக்டர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி
Published on

தேனி:

மண்எண்ணெய் பறிமுதல்

உத்தமபாளையம் அருகே உள்ள பல்லவராயன்பட்டியை சேர்ந்த பவுன் மனைவி வனஜோதி (வயது 50). இவர் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று வந்தார். அப்போது அவர் கையில் வைத்திருந்த பையை கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் நின்ற போலீசார் சோதனையிட்டனர்.

அதில் ஒரு பாட்டிலில் மண்எண்ணெய் இருந்தது. தீக்குளிப்பதற்காக அதை கொண்டு வந்ததாக அவர் கூறினார். இதையடுத்து மண்எண்ணெயை பறிமுதல் செய்த போலீசார் அவரை விசாரணைக்காக தேனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.

மகள் மாயம்

அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது அவர், "எனது மகள் துர்காதேவி (23) கடந்த ஆகஸ்டு மாதத்தில் காணாமல் போனார். எனது மகள் மாயமானதில் எங்கள் ஊரைச் சேர்ந்த ஒருவர் மீது எனக்கு சந்தேகம் எழுந்தது. இதுகுறித்து கோம்பை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தேன். ஆனால், எனது மகளை கண்டுபிடிக்க போலீசார் நடவடிக்கை எடுக்காததால் தீக்குளிக்க கலெக்டர் அலுவலகம் வந்தேன். எனது மகளை கண்டுபிடித்து தாருங்கள்" என்றார். இதையடுத்து அவருக்கு போலீசார் அறிவுரை கூறினர்.

பின்னர் கோம்பையில் இருந்து போலீசார் வரவழைக்கப்பட்டு அவர்களுடன், வனஜோதியை போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com