அத்தை மகள் இறந்த அதிர்ச்சியில் விபரீத முடிவு, ரெயில் முன்பு பாய்ந்து போலீஸ்காரர் தற்கொலை

அத்தை மகள் இறந்த அதிர்ச்சியில், ரெயில் முன்பு பாய்ந்து போலீஸ்காரர் தற்கொலை செய்து கொண்டார்.
அத்தை மகள் இறந்த அதிர்ச்சியில் விபரீத முடிவு, ரெயில் முன்பு பாய்ந்து போலீஸ்காரர் தற்கொலை
Published on

திண்டுக்கல்,

திண்டுக்கல் ஆர்.வி.நகர் முதல் தெருவை சேர்ந்தவர் சூசைமாணிக்கம். இவருடைய மகன் ஸ்டீபன்நெல்சன் (வயது 24). இவர், திருச்சி காவலர் பயிற்சி பள்ளியில் போலீஸ்காரராக பயிற்சி பெற்று வந்தார். ஸ்டீபன்நெல்சனும், கும்பகோணத்தை சேர்ந்த அவரது அத்தை மகளும் காதலித்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஸ்டீபன்நெல்சன், தனது குடும்பத்தினருடன் அத்தை வீட்டுக்கு சென்று திருமணத்துக்கு பெண் கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த ஸ்டீபன்நெல்சனின் காதலி, கடந்த வாரம் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அந்த பெண் பரிதாபமாக இறந்தார்.

இதனால் அதிர்ச்சியடைந்த ஸ்டீபன்நெல்சன், விடுமுறை எடுத்துக்கொண்டு திண்டுக்கல்லுக்கு வந்தார். ஆனால் வீட்டில் யாருடனும் பேசாமல் மனமுடைந்த நிலையில் காணப்பட்டார். அத்தை மகள் இறந்த துக்கத்தில் இருக்கிறார் என குடும்பத்தினர் நினைத்தனர்.

இந்த நிலையில் நேற்று மாலை கடைக்கு சென்று வருவதாக கூறி அவர் வீட்டை விட்டு வெளியே சென்றார். ஆனால் அவர் மொட்டணம்பட்டி-ஏ.வெள்ளோடு இடையே அந்த வழியாக வந்த ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் கீதா, சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் மற்றும் போலீசார் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரெயில் முன்பு பாய்ந்து போலீஸ்காரர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com