அதிகாரிகள் கெடுபிடி: சேதுபாவாசத்திரத்தில், மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

சேதுபாவாசத்திரத்தில், அதிகாரிகள் கெடுபிடி காரணமாக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
அதிகாரிகள் கெடுபிடி: சேதுபாவாசத்திரத்தில், மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை
Published on

சேதுபாவாசத்திரம்,

தஞ்சை மாவட்டத்தில் மல்லிப்பட்டினம், சேதுபாவாசத்திரம் ஆகிய 2 இடங்களில் விசைப்படகுகளுக்கான மீன்பிடி துறைமுகங்கள் உள்ளன. விசைப்படகுகள் வாரத்தில் திங்கட்கிழமை, புதன்கிழமை, சனிக்கிழமை ஆகிய 3 நாட்கள் மட்டும் கடலுக்கு மீன்பிடிக்க செல்வார்கள். மற்ற தினங்களில் நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள்.

விசைப்படகு மீனவர்கள் இரட்டைமடி, சுருக்குமடி, சலங்கை வலை போன்ற வலைகளை பயன்படுத்தி மீன்பிடிக்க அரசு தடை விதித்துள்ளது. அதன் காரணமாக அந்த வலைகளை பயன்படுத்தாமலேயே மற்ற வலைகள் மூலம் அதிக அளவு மீன் பிடித்து கரைக்கு வரும் விசைப்படகு மீனவர்கள் மீது இரட்டைமடி வலை பயன்படுத்தியதாக வழக்கு தொடரப்படும் என மீன்வளத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

அதிகாரிகள் கெடுபிடி

அதேநேரத்தில் மீன் மடி, இறால் மடி என இருவகையான வலைகளை பயன் படுத்தி மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்வதாக கூறுகிறார்கள். இறால் மடி வலை சிறியதாகவும், மீன் மடி சற்று பெரியதாகவும் இருக்கும். மீன் மடி வலையை பயன்படுத்தி மீன்பிடி தொழில் செய்தால் அதிக அளவில் மீன்கள் மற்றும் சங்காயம் என கூறப்படும் கழிவு மீன்களும் பிடிபடுகின்றன.

இந்த நிலையில் மீன்வளத்துறை அதிகாரிகள் கடலுக்குள் சென்று சோதனை நடத்தாமல், கரையில் இருந்தபடி அதிக மீன்களை பிடித்து வரும் மீனவர்களை எச்சரித்ததாக கூறப்படுகிறது. மேலும் மீன் மடி வலையை பயன் படுத்துவதற்கும் மீன்வளத்துறை அதிகாரிகள் தடை விதிப்பதாக மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர். அதிகாரிகளின் இந்த கெடுபிடி காரணமாக சேதுபாவாசத்திரம் துறைமுகத்தில் இருந்து மீனவர்கள் நேற்று முன்தினம் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் துறைமுகத்தை சேர்ந்த 52 விசைப்படகுகள் நேற்று முன்தினம் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

இதுபற்றி தஞ்சை மாவட்ட விசைப்படகு மீனவர் சங்க தலைவர் ராஜமாணிக்கம் கூறியதாவது:-

வருவாய் குறைவு

இரட்டை மடி வலைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் மீன் மடி வலையை பயன்படுத்தக்கூடாது என அதிகாரிகள் கூறுகின்றனர். இதை மீறினால் இரட்டை மடி வலையை பயன்படுத்தியதாக வழக்கு தொடர்வோம் என மிரட்டுகிறார்கள். இறால் மடியை பயன்படுத்தி மீன்பிடி தொழில் செய்தால் இறால் வருவாயும் குறைவு. அந்த வலையில் அதிக அளவு மீன்களும் கிடைக்காது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வரை கடலுக்கு செல்வதில்லை என மீனவர்கள் மத்தியில் முடிவு எடுத்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com