லோடு ஆட்டோ-மோட்டார் சைக்கிள் மோதல்: என்ஜினீயர் பலி

சங்கரன்கோவில் அருகே லோடு ஆட்டோ மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற என்ஜினீயர் பரிதாபமாக பலியானார். மேலும் 2 வாலிபர்கள் காயம் அடைந்தனர்.
லோடு ஆட்டோ-மோட்டார் சைக்கிள் மோதல்: என்ஜினீயர் பலி
Published on

சங்கரன்கோவில்,

சங்கரன்கோவில் அருகில் உள்ள சக்கரைக்குளத்தை சேர்ந்த ராமச்சந்திரன் மகன் கேசவராஜ்(வயது26). பி.இ. பட்டதாரி. இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் என்ஜினீயராக வேலை பார்த்து வந்தார்.

நேற்று முன்தினம் பலபத்திர ராமபுரத்தில் வசித்த அவருடைய தாத்தா இறந்த துக்க நிகழ்ச்சிக்காக சென்னையில் இருந்து அவர் வந்திருந்தார். அன்று இரவில் நிகழ்ச்சி முடிந்த நிலையில், உறவினரான பூவலிங்கபுரத்தை சேர்ந்த கார்த்திக்கை(25), அவருடைய ஊரில் இறக்கி விடுவதற்காக மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றார். அவர்களுடன் பலபத்திர ராமபுரத்தை சேர்ந்த அணில்(26) என்பவரும் சென்றார். மோட்டார் சைக்கிளை கேசவராஜ் ஓட்டி சென்றார்.

தளவாய்புரம் அருகே சென்று கொண்டிருந்தபோது, அந்த வழியாக வந்த லோடு ஆட்டோ ஒன்று எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. அப்போது மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட 3 பேரும் சாலையில் விழுந்தனர். இதில் கேசவராஜ் பலத்த காயங்களுடன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மற்ற 2பேரும் லேசான காயங்களுடன் சாலையில் கிடந்தனர். அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து சின்னகோவிலாங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற லோடு ஆட்டோவையும், அதை ஓட்டி சென்றவரையும் தேடிவருகின்றனர். தாத்தாவின் துக்க நிகழ்ச்சிக்கு சென்னையில் இருந்த வந்த என்ஜினீயர் விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com