

கோவை
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கோவை மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இது தவிர துணை ராணுவத்தினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில் சட்டமன்ற தேர்தலில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில், கோவையில் 3 இடங்களில் மாநகர போலீசாரும், துணை ராணுவத்தினரும் கொடி அணிவகுப்பு நடத்தினர்.
இதை மாநகர போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் தொடங்கி வைத்தார். இதில் 100-க்கும் மேற்பட்ட போலீசாரும், துணை ராணுவத்தினரும் வின்சன்ட் ரோட்டில் தொடங்கி பெரிய கடைவீதி, டவுன்ஹால், அத்தர் ஜமாத், பிரகாசம் பஸ் நிறுத்தம் வழியாக உக்கடம் சென்றடைந்தனர்.
மற்றொரு குழுவினர் மரக்கடையில் தொடங்கி ஆர்.ஜி.வீதி, பூ மார்க்கெட், மெக்கானிக்கல் ரோடு, டி.பி. ரோடு வழியாக ஆர்.எஸ்.புரம் போலீஸ் நிலையம் அருகே வரை அணிவகுத்து சென்றனர்.
மேலும் ஒரு குழுவினர் டாடாபாத் பவர் ஹவுஸ் பகுதியில் தொடங்கி சிவானந்தா காலனி, ஆறுமுக்கு, சம்பத் வீதி வழியாக சென்று ரத்தினபுரியில் அணி வகுப்பை நிறைவு செய்தனர்.