

வடக்கன்குளம்,
நெல்லை மாவட்டம் பழவூர் அருகே உள்ள ஆவரைகுளம் முத்தாரம்மன் கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 6-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 10 நாட்கள் நடந்த விழாவில் தினமும் சிறப்பு பூஜைகள், மாலையில் சமய சொற்பொழிவு, இரவில் கலைநிகழ்ச்சி நடந்தது.
8-ம் நாள் இரவில் 1,008 திருவிளக்கு பூஜை நடந்தது. 10-ம் நாளான நேற்று முன்தினம் விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடந்தது. இதனை முன்னிட்டு, காலையில் சிறப்பு பூஜைகள் நடந்தது.
தொடர்ந்து மாலையில் அம்மன் தேரில் எழுந்தருளினார். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி கோஷங்களை முழங்கியவாறு, வடம் பிடித்து தேரை இழுத்தனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் கோவில் நிலையை வந்தடைந்தது.
விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாக குழுவினர் செய்து இருந்தனர்.