

செம்பட்டு,
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து ஏர் ஏசியா விமானம் தினமும் இரவு 9.35 மணிக்கு திருச்சிக்கு வரும். பின்னர் திருச்சியில் இருந்து இரவு 10.35 மணிக்கு கோலாலம்பூர் நோக்கி புறப்பட்டு செல்லும். இந்நிலையில் இந்த விமானம் நேற்று முன்தினம் இரவு திருச்சியில் 10.10 மணிக்கு தரையிறங்கியது.
மீண்டும் அந்த விமானம் புறப்படுவதற்கு தயாராக இருந்தபோது விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த விமான சேவை ரத்து செய்யப்பட்டு, திருச்சி விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் அந்த விமானத்தில் பயணம் செய்ய இருந்த 90 பயணிகள், விமான நிலையத்தின் வளாகத்தில் தங்க வைக்கப்பட்டனர். இதனால் அவர்கள் அவதியடைந்தனர்.
90 பயணிகள்
இதில் 83 பேர், நேற்று முன்தினம் நள்ளிரவு 12.15 மணிக்கு மலேசியாவில் இருந்து திருச்சி வந்து, மீண்டும் மலேசியா புறப்பட்ட ஏர் ஏசியா விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டனர். மீதமிருந்த 7 பயணிகள் நேற்று காலை மலேசியா சென்ற ஏர் ஏசியா விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்ட ஏர் ஏசியா விமானம், கோளாறு சரி செய்யப்பட்டதை தொடர்ந்து நேற்று மதியம் 2.50 மணிக்கு திருச்சி விமான நிலையத்தில் இருந்து பயணிகள் இல்லாமல் மலேசியா நோக்கி புறப்பட்டு சென்றது.