தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு மனித சங்கிலி- “ஸ்கேட்டிங்” ஊர்வலம்

நாடாளுமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு மனித சங்கிலியும், பள்ளி மாணவ- மாணவிகளின் “ஸ்கேட்டிங்” ஊர்வலமும் நடைபெற்றது.
தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு மனித சங்கிலி- “ஸ்கேட்டிங்” ஊர்வலம்
Published on

அரியலூர்,

நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் 100 சதவீதம் மக்கள் வாக்களிக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவிற்கிணங்க, தேர்தல் விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சி அரியலூரில் நேற்று நடந்தது. அரியலூர் அண்ணா சிலை முதல் தேரடி வரை அரசு ஐ.டி.ஐ. மாணவ- மாணவிகளின் விழிப்புணர்வு மனித சங்கிலி நடைபெற்றது. இதில் மாணவர்கள் கைக்கோர்த்து நின்றனர். அரியலூர் மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான விஜயலட்சுமி, சிதம்பரம் (தனி) நாடாளுமன்ற தொகுதி தேர்தல் பொது பார்வையாளர் குல்கர்னி ஆகியோர் கலந்து கொண்டனர்.

மனித சங்கிலியில் கலந்து கொண்ட மாணவ- மாணவிகள் 100 சதவீதம் வாக்களிப்போம், வாக்களிப்பது நமது ஜனநாயக கடமையாகும், எந்தவொரு வாக்காளரும் விடுபடக்கூடாது போன்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகள் வைத்திருந்தனர். அதனை தொடர்ந்து அரியலூர் தொழிற்பயிற்சி நிலையத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் தலைமையில், தேர்தல் விழிப்புணர்வு உறுதிமொழியினை மாணவ- மாணவிகள் ஏற்றுக்கொண்டனர்.

இதேபோல் தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவு குறித்து பள்ளி மாணவ- மாணவிகளின் ஸ்கேட்டிங் விழிப்புணர்வு ஊர்வலத்தை மாவட்ட தேர்தல் அதிகாரி விஜயலட்சுமி கொடியசைத்து தொடங்கி வைத்தார். அரியலூர் விளையாட்டு அரங்கிலிருந்து தொடங்கிய இந்த ஊர்வலம் அண்ணாசிலை, தூய மேரி பள்ளி வழியாக சத்திரம் சென்று மீண்டும் அரியலூர் விளையாட்டு அரங்கில் முடிவுற்றது.

இதில் அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் சத்திய நாராயணன், மாவட்ட வழங்கல் அலுவலர் ரவிசந்திரன், வட்டாட்சியர் கதிரவன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஜெயஅருள்பதி, தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் நாகராஜன், ஒருங்கிணைப்பாளர் பழனியப்பன், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அலுவலர் ஜெயகுமார்ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் சிதம்பரம் (தனி) நாடாளுமன்ற தொகுதிக்கு நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் பொது பார்வையாளர் குல்கர்னி அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஊடக மையம் மற்றும் ஊடக சான்றிதழ் வழங்கும் குழு அறைகளை மாவட்ட தேர்தல் அதிகாரி விஜயலட்சுமி முன்னிலையில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மாவட்ட வருவாய் அதிகாரி பொற்கொடி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஜெயஅருள்பதி மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com