

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க திருவள்ளூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட கலெக்டரின் சீரிய முயற்சியால் ஏற்பாடு செய்யப்பட்ட முதலாவது மாபெரும் புத்தக கண்காட்சி நடைபெற உள்ளது. இந்த புத்தக கண்காட்சி தொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக புத்தக கண்காட்சி அரங்க பகுதியில் செல்பி எடுப்பதற்காக அமைக்கப்பட்ட சிற்பம் மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் மீண்டும் மஞ்சப்பை பயன்பாட்டை வலியுறுத்தி ஏற்படுத்தப்பட்ட அடையாள சிற்பம் உள்ளிட்ட விழிப்புணர்வு சிற்பங்கள் வைக்கப்பட்டிருந்தது.
இதனை நேற்று பால்வளத்துறை அமைச்சரும், தி.மு.க.வின் மத்திய மாவட்ட பொறுப்பாளருமான ஆவடி சா.மு.நாசர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். நிகழ்ச்சியில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் வருண் குமார், எம்.எல்.ஏ.க்கள் சந்திரன், துரைசந்திரசேகர், மாவட்ட வன அலுவலர் ராம்மோகன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமாமகேஸ்வரி, ஆவடி மாநகராட்சி மேயர் உதயகுமார், ஆவடி மாநகராட்சி கமிஷனர் சரஸ்வதி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயக்குமார், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வித்யா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.